லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ள போதிலும் இங்கிலாந்து-பெல்ஜியம் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்ததால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றது.
லண்டனில் நடைப்பெற்று வரும் 36வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் கடந்த வியாழக்கிழமை மோதியது.

இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் கண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் சிக்கி திணறியது.
20வது நிமிடத்தில் டிரென்ட் மிட்டானும், 23வது நிமிடத்தில் கேப்டன் அரன் ஜாலெவ்ஸ்கியும், 35வது நிமிடத்தில் பிளைன் ஒஜில்வியும், 45வது நிமிடத்தில் டிரிஸ்டான் ஒயிட்டும் ஆஸ்திரேலியா சார்பில் கோல் அடித்தனர்.
இந்திய தரப்பில் ரகுநாத் 45-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 49-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.
ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி. 13 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. 7 புள்ளிகளுடன் இந்திய அணி இராண்டாவது இடத்தை பெற்றது.
அதேநேரம் இங்கிலாந்து (5 புள்ளி) மற்றும் பெல்ஜியம் (4 புள்ளி) இடையிலான லீக் ஆட்டம் 'டிரா' ஆனதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக பெற்றது.
இதனையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மீண்டும் இந்தியா மோதுகிறது.