சென்னை: சென்னையில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான செஸ் திருவிழா களைகட்டவிருக்கிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 செஸ் போட்டி, ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை, முன்பை விட பிரம்மாண்டமாகவும், அதிக பரிசுத் தொகையுடனும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் செஸ் தலைநகரம் என்று அழைக்கப்படும் சென்னையில் நடைபெறும் இந்தத் தொடர், மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு, சிங்கப்பூரைச் சேர்ந்த குவாண்ட்பாக்ஸ் ரிசர்ச் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இணைந்துள்ளதால், போட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தப் போட்டி, சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு போட்டி முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 8 வீரர்களாக இருந்த நிலையில், இந்த முறை மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளிலும் தலா 10 வீரர்கள் என மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், முந்தைய பதிப்புகளில் 7 சுற்றுகளாக இருந்த போட்டி, இந்த முறை 9 சுற்றுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் கிளாசிக்கல் முறையில் நடைபெறும்.
இந்த ஆண்டின் மற்றொரு சிறப்பு அம்சம், இதுவரை இல்லாத அளவாக பரிசுத்தொகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.15 லட்சமும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.7 லட்சம் பரிசுத்தொகையுடன், அடுத்த ஆண்டு நடைபெறும் மாஸ்டர்ஸ் பிரிவில் நேரடியாகப் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும். இது தவிர, கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற உதவும் மதிப்புமிக்க ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் இந்தத் தொடரின் மூலம் வீரர்களுக்குக் கிடைக்கும்.
இந்த முறை உலகின் தலைசிறந்த வீரர்களும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களும் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் நம்பர் 1 வீரரான அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி மற்றும் கடந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் பட்டம் வென்று மாஸ்டர்ஸ் பிரிவுக்குத் தகுதி பெற்ற மற்றொரு தமிழக வீரரான பிரணவ் வி ஆகியோர் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.
இவர்களுடன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன் மற்றும் அவோண்டர் லியாங், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரஸ்ட் ஆகிய சர்வதேச கிராண்ட்மாஸ்டர்களும் களமிறங்குகின்றனர்.
இந்த பிரிவில் இந்தியாவின் இளம் மற்றும் திறமையான வீரர்கள் பலரும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணவல்லி, லியோன் லூக் மெண்டோன்கா, பாஸ்கரன் அதிபன், ஆரியன் சோப்ரா, அபிமன்யு புரனிக், இனியன் பி, திப்தாயன் கோஷ், பிரனேஷ் எம் மற்றும் ஹர்ஷவர்தன் ஜிபி ஆகியோர் இந்தப் பிரிவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந்த முறை சாதனை அளவாக தமிழகத்திலிருந்து 7 வீரர்கள் பங்கேற்பது, மாநிலத்தின் செஸ் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும், செஸ் உலகின் ஜாம்பவானும், ஐந்து முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், போட்டியின் ஒரு நாளில் வர்ணனையாளராக இணையவிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அமையவுள்ளது. மொத்தத்தில், இந்த சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 தொடர், செஸ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்பலாம்.