சென்னை: தொடர்ந்து சந்தித்து வந்த தோல்வியை ஒரு வழியாக நிறுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில், பெங்களூர் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. சென்னை அணி தனது சிறப்பான பந்து வீச்சால் பெங்களூர் அணியை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது.
முத்தையா முரளீதரனும், ஷதாப் ஜகதியும் அபாரமாக பந்து வீசினர். ஜகதி, இந்த போட்டித் தொடரின் நான்காவது மெய்டன் ஓவரை வீசி அசத்தினார். பந்து வீச்சு சிறப்பாக இருந்த காரணத்தால் பெங்களூர் அணியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 161 ரன்களே எடுக்க முடிந்தது.
கல்லிஸ் வழக்கம் போல சிறப்பாக ஆடி 52 ரன்களைக் குவித்தார். ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 21 ரனக்ளைச் சேர்த்தார். விராத் கோலி 34 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆடும் கெவின் பீட்டர்சன் 23 ரன்களும், கேமரூன் ஒயிட் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் ஆட வந்த சென்னை அணிக்கு முரளி விஜய் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். அடித்து நொறுக்கி ஆடிய அவர் 39 பந்துகளை மட்டுமே சந்தித்து 78 ரன்களைக் குவித்தார். இதில் நான்கு பவுண்ரிகளும், 6 சிக்சர்களும் அடக்கம்.
மறுபக்கம் மாத்யூ ஹெய்டன் 12 ரன்களில் வீழ்ந்தார். சென்னை அணியின் ரன் குவிப்பு கும்ப்ளே பந்து வீச வந்த பிறகுதான் மட்டுப்பட்டது. சிறப்பாக பந்து வீசிய கும்ப்ளே 4 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
முரளியைப் போலவே சுரேஷ் ரெய்னாவும் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 ரன்களை குவித்தார்.
இறுதியில், சென்னை அணி 5 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை தொட்டது. இதன் மூலம் முக்கியப் போட்டியை வென்று சென்னை அணிக்கு உயிர் கொடுத்துள்ளனர் அந்த அணியின் வீரர்கள்.
ஆட்ட நாயகனாக முரளி விஜய் தேர்நதெடுக்கப்பட்டார்.
திணேஷ் அபார ஆட்டம்- டெல்லி வெற்றி
டெல்லியில் நடந்த இன்னொரு போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின.
டெல்லி அணியின் திணேஷ் கார்த்திக் புயலாக மாறி ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்ததோடு, அணிக்கும் வெற்றியைத் தேடித் தந்தார்.
முதலில் ஆடிய டெல்லி அணி 188 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 17.4 ஓவர்களிலேயே 121 ரன்கள் மட்டும் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக டெல்லி அணியின் பேட்டிங்கை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டார் திணேஷ் கார்த்திக். மின்னல் வேகத்தில் பேட்டிங் செய்த அவர் 38 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் என்ற மோசமான நிலையில் டெல்லி இருந்தபோது பேட் செய்ய வந்தார் கார்த்திக். அதன் பின்னர் வெளுத்துக் கட்டிய திணேஷ் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 6 பவுண்டரிகளையும், 4 சிக்சர்களையும் அவர் விளாசினார்.
டேவிட் வார்னர் 4, ஷேவாக் 19 என வீழ்ந்ததால் டெல்லி தடுமாறியது. அதேபோல பாலி காலிங்வுட்டும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கம்பீருடன் இணைந்து திணேஷ் கார்த்திக் அணியை ஸ்திரப்படுத்தி விட்டார். கம்பீரும், திணேஷும் இணைந்து 79 ரன்களைச் சேர்த்தனர். இறுதியில் டெல்லி அணி 6 விக்கெட்களை இழந்து 188 ரன்களைக் குவித்தது
ராஜஸ்தான் அணியில் மைக்கேல் லம்ப், பயஸ் பசல் ஆகியோர் ஏமாற்றினர். யூசுப் பதான் 14 பந்துளில் 24 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அந்த அணியின் இதர வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் சுருண்டு போனது ராஜஸ்தான்.