
சூப்பர் பிளேயர்
டிபன்டராக இந்திய அணியில் வலம் வரும் சேரலாதன், இந்தியாவிலேயே அதிக அளவிலான தேசிய கபடிப் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற சாதனையாளரும் கூட. அதிக அளவிலான சர்வதேச போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர்.

10 வருடமாக
இந்திய அணியில் கடந்த 10 வருடமாக இடம் பெற்றிருக்கிறார். இவரது அனுபவம் அத்தனையும் இந்த முறை நமது அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு பயன்பட்டுள்ளது என்பது தமிழராக அனைவருக்கும் பெருமையாகும். காரணம், தமிழர்களின் விளையாட்டு கபடி என்பதால்.

வியூகம் வகுப்பதில் கில்லி
ஒரு சிறந்த ரைடராக மட்டுமல்லாமல் அணியை ஒருங்கிணைத்து அபாரமாக விளையாடுவதிலும்,அணியினரை தட்டிக் கொடுப்பதிலும், வியூகம் வகுப்பதிலும் சேரலாதன் கில்லி ஆவார்.

பாய்ந்தாடி வருகிறார்
1999லும், 2010ம் ஆண்டிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் முக்கியப் பங்கு வகித்தவர் சேரலாதன். சேரலாதனுக்கு தற்போது 41 வயதாகிறது. இந்த வயதில் வழக்கமாக பயிற்சியாளராக இருப்பார்கள். ஆனால் இன்னும் பாய்ந்தாடி வருகிறார் சேரலாதன். அவரது திறமைக்கு இதுவே மிக முக்கிய சான்றாகும்.

பாட்னா கேப்டன்
மேலும் பாட்னா பைரேட்ஸ் என்ற தொழில்முறை கபடி லீக் அணியின் கேப்டனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சேரலாதன். இந்த ஆண்டு கோப்பையை பாட்னா அணிதான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளப் அமைக்க வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சேரலாதன் சிறு வயதிலிருந்தே கபடி விளையாடி வருகிறார். வெறித்தனமான இவரது கபடி வேட்கையைப் பார்த்த பெற்றோர் அவரை சுதந்திரமாக விளையாட விட்டனர். தற்போது தென் மத்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் சேரலாதன் மிகப் பெரிய கபடி கிளப்பை தனது சொந்த ஊரில் ஏற்படுத்த வேண்டும். எண்ணற்ற இளைஞர்களை கபடியில் சிறப்பாக பரிமளிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











