செஸ் விளையாட்டில் 9 வயதில் சாதனை.. கிராண்ட் மாஸ்டரையே தோற்கடித்த சிறுவன்.. யார் இந்த ஆர்த்தி கபில்?
புபனேஸ்வர் : விளையாட்டுப் போட்டியில் எப்போதுமே வயது என்பது மிகவும் முக்கிய ஒரு அம்சமாக பார்க்கப்படும். ஒவ்வொரு விளையாட்டு பிரிவிலும் களமிறங்க ஒவ்வொரு வயது பிரிவு இருக்கும். ஆனால் சமீப காலமாக வயது என்பது ஒரு விஷயமே விளையாட்டு உலகத்தில் இல்லை என்பது தெரிகிறது.
13 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி ஐபிஎல் தொடரில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார். இதேபோன்று 43 வயதான தோனி இன்னும் கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக அறியப்படுகிறார். தோனி 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்று சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார்.

இப்படி விளையாட்டுக்கு வயது ஒரு வரம்பாக தற்போது இல்லை. இந்த சூழலில் தான் செஸ் போட்டியில் 9 வயது சிறுவனான ஆர்த்தி கபில் கிராண்ட் மாஸ்டர் ஒருவரை தோற்கடித்து அசத்தியிருக்கிறார். ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் கே ஐஐடி இன்டர்நேஷனல் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றிருக்கிறது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த 66 வயதான கிராண்ட் மாஸ்டர் ராசிட், சிறுவன் ஆர்த்தி கபிலுடன் பலப் பரீட்சை நடத்திருக்கிறார். சிறுவன் தானே என்ன செய்து விடப் போகிறார் என்ற பாணியில் விளையாடிய 66 வயது வீரரான ராசித்தை 9 வயது சிறுவன் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறார்.
அமெரிக்க வீரர் செய்த தவறை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஆர்த்தி கபில் அதிர்ச்சி அளித்திருக்கிறார். சுமார் 63 நகர்த்தலுக்கு பிறகு ஆர்த்தி கப்பில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார். இதன் மூலம் ஒரு கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ள வீரரை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்த்தி கபில் படைத்திருக்கிறார்.
உலக அளவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் வீரர் அஸ்வத் கவுசிக் தனது எட்டு வயதில் போலந்து கிராண்ட் மாஸ்டர் வீழ்த்தியது சாதனையாக இருக்கிறது. இதன் மூலம் ஆர்த்தி கபில் மீது ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் திரும்பி இருக்கிறது. தற்போது 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆர்த்தி கபில் பங்கேற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் போட்டியில் புனேவில் பங்கேற்க இருக்கிறார். தற்போது ஆர்த்தி கபிலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications