சென்னை: 2024 செஸ் ஒலிம்பியாட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய செஸ் விளையாட்டு அணி இந்த முறையும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2022இல் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணிக்கான நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பையை வென்று இருந்தது. அந்த கோப்பையை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வெற்றி பெற்ற அணி வைத்துக் கொள்ள முடியும்.
அடுத்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் போது கோப்பையை மீண்டும் சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கோப்பை இந்த முறை வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும். அந்த வகையில் 2022 செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வென்ற நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பையை ஒப்படைக்குமாறு சர்வதேச செஸ் கூட்டமைப்பு சில வாரங்களுக்கு முன் கேட்டது. அப்போது தான் அந்த கோப்பை காணாமல் போன விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டில் மூன்று கோப்பைகள் வழங்கப்படும். செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் வெற்றி பெறும் அணி 'ஹாமில்டன்-ரசல் கோப்பையை' வெல்லும்; பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணி 'வேரா மெஞ்சிக் கோப்பையை' வெல்லும். ஒருங்கிணைந்த அளவில் வெற்றி பெறும் அணி 'நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை'யைப் வெல்லும். கோப்பைகள் சுழற்சி முறையில் வழங்கப்படும். அதாவது வெற்றியாளர்கள் அடுத்த ஒலிம்பியாட் நடைபெறும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு அதை வைத்திருப்பார்கள். பின்னர் அதை ஒப்படைத்து விட வேண்டும்.
2022 சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வென்ற நோனா கப்ரின்டாஷ்விலி கோப்பை காணாமல் போனதால் இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு இருக்கிறது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் (AICF) முந்தைய நிர்வாகிகள் விலகி, தற்போது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முந்தைய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், இந்தியா வென்ற கோப்பையையும் காணவில்லை.
புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 11வது சுற்று முடிந்த பிறகு வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்க வேண்டும் என்பதால் 2022இல் இந்தியா வென்ற நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை திருப்பித் தருமாறு கோரி சில வாரங்களுக்கு முன் சர்வதேச செஸ் கூட்டமைப்பு மின்னஞ்சல் அனுப்பியது.
இந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாகம், நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதையே அப்போதுதான் உணர்ந்து இருக்கிறது. பின்னர், புது தில்லி மற்றும் சென்னையில் உள்ள அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடந்தது.
கடைசியாக சென்னை ஹோட்டல் ஒன்றில் அந்த கோப்பை இருந்துள்ளது. அங்கும் தேடுதல் நடத்தப்பட்டது. முந்தைய செஸ் கூட்டமைப்பு அலுவலகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டும் கேட்கப்பட்டது. செஸ் வீரர்களிடம் கூட கோப்பை குறித்து கேட்கப்பட்டது. ஆனால், யாருக்கும் அந்த கோப்பை எங்கே உள்ளது என்பது தெரியவில்லை. 2022 செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்திய தமிழக அரசிடமும் இது குறித்து கேட்கப்பட்டு உள்ளது. தற்போது காவல்துறை இந்த கோப்பை குறித்து தீவிரமாக சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் புடாபெஸ்ட் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவதற்குள் அந்த கோப்பை கிடைக்காமல் போனால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கவுரவத்துக்கு குந்தகம் ஏற்படும்.