மும்பை : விளையாட்டு உலகில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து வருகிறார்கள். சாம்பியன் பட்டங்களை வெல்வதிலும் சரி அதன் மூலம் பிரபலமாவதிலும் சரி பெண்கள் தற்போது பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஆனால் வீராங்கனையின் அழகை மட்டுமே சிலர் பார்க்கிறார்கள் என்றும் திறமையை பார்ப்பதில்லை என்றும் இந்திய செஸ் வீராங்கனை ஒருவர் குற்றச்சாட்டி இருந்தார்.
18 வயது வீராங்கனையான திவ்யா தேஸ்முக், கடந்த ஆண்டு மகளிருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை திவ்யா கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றைப் போட்டு இருந்த அவர் ஆண் போட்டியாளர்களை புகழும் போது அவர்களுடைய திறமையையும் விளையாட்டுத் திறனையும் பார்த்து பேசுகிறார்கள்.

ஆனால் மகளிர் விளையாடும் போது அவர்களுடைய அழகையும் ஆடையும் மட்டுமே கவனிக்கிறார்களே தவிர போட்டியை குறித்து யாருமே பேச மாட்டார்கள். எங்களுடைய திறமைக்கு இங்கு மதிப்பே இல்லை. வீராங்கனை ஆடை எவ்வாறு இருக்கிறது? அவருடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதை தான் கவனிக்கிறார்கள்.எங்களுடைய திறமையும் பாருங்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்காவில் வசித்து வரும் செஸ் வீராங்கனை சுசன் போல்கார், தமக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து பதிவிட்டு இருக்கிறார். அதில் நான் இளம் வீராங்கனையாக இருந்த போது ஒரு முறை கூட மேக்கப் போட்டதில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணம் இருக்கிறது. நான் விளையாடிய காலத்தில் நான் மட்டும்தான் பெண் போட்டியாளராக இருப்பேன். மற்றவர்கள் எல்லாம் ஆண்களாக தான் இருப்பார்கள்.
அந்த சமயத்தில் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள். அங்கு இருக்கும் ஆன் போட்டியாளர்கள் என்னை அடித்து பாலியல் வற்புறுத்தலை தருவார்கள். என்னிடம் அப்போது போதிய பணமும் ஆடையும் இருக்காது. பாலியல் ரீதியான வேறுபாடுகள் இன்றளவும் செஸ் விளையாட்டில் இருக்கிறது. இந்த தருணத்தில் தான் என்னுடைய திறமையை நான் செஸ் விளையாட்டில் நிரூபிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன்.
என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து எல்லாம் நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் மற்ற ஆண்கள் என்னை வந்து சந்திக்க நான் அங்கு செல்லவில்லை. நான் ஒவ்வொரு தொடரிலும் விளையாடும்போது என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். கடந்த காலத்தைப் பார்க்கும்போது இப்போது முன்னேறி இருக்கிறது. ஆனால் சில தருணங்களில் தப்பும் நடக்க தான் செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால் போட்டியின் போது சில ஆண்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சில சமயம் மிகவும் ஆபத்தாக கூட போய் முடியும். என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போட்டிகளில் நான் பங்கேற்காமல் பாதியிலே ஓடி வந்து விட்டேன். அதுவும் தொடரின் போது ஆண் போட்டியாளர்கள் மது அருந்தி விட்டால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது.
தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வந்தேன். பல போட்டியாளர்கள் என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அப்போது முடியாது என்று சொன்னால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னை உடல் ரீதியாக தாக்கி இருக்கிறார்கள் என்று சூசன் போல்கார் தெரிவித்துள்ளார். போல்காரின் இந்த பதிவு, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செஸ் போன்ற விளையாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.