சென்னை: தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, FIDE சர்க்யூட் 2025-ஐ வென்று கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இந்த ஆண்டு விஜ்க் ஆன் ஸீ மாஸ்டர்ஸ், சூப்பர்பெட் செஸ் கிளாசிக் ருமேனியா, உஸ்-செஸ் கப் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் போன்ற பல்வேறு முக்கிய போட்டிகளில் வென்றுள்ளார்.
ஸ்டீபன் அவாக்யான் மெமோரியல் மற்றும் 12-வது சின்க்ஃபீல்ட் கப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். மேலும், சமீபத்திய FIDE உலகக் கோப்பையில் நான்காவது சுற்று வரை முன்னேறி வெளியேறினார்.கேண்டிடேட்ஸ் 2026 தொடரில் 8 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, ஃபாபியானோ கருவானா, மத்தேயாஸ் ப்ளூபாம், ஜாவோகிர் சிந்தாரோவ், வெய் யீ, ஆண்ட்ரே எசிபெங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடைசி ஒரு இடத்திற்கான தகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிக்காரு நகமுரா இப்பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது. கேண்டிடேட்ஸ் 2026 போட்டி, 2026 மார்ச் 28 முதல் ஏப்ரல் 16 வரை சைப்ரஸின் பெஜியாவில் உள்ள கேப் செயின்ட் ஜார்ஜஸ் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் வெற்றி பெறும் வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும். இதனால், இந்த தொடரை பிரக்ஞானந்தா வென்றால், உலக சாம்பியனான குகேஷ் உடன் மோத வாய்ப்பு ஏற்படும். ஒருவேலை அப்படி நடந்தால், அது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப் பெரிய பெருமையாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பெண்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி, ஆர். வைஷாலி ஆகிய மூன்று இந்திய பெண் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.