உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் வெங்கடேஷ்.. 17 ஆண்டுக்கு பிறகு சாதனை
சென்னை: உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீரர் பிரணவ் வெங்கடேஷ் கைப்பற்றி அசத்தினார். 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்த தொடரில் பிரணவ் வெங்கடேஷ், 11வது சுற்றில் ஸ்லோவன்யா நாட்டை சேர்ந்த மாட்டிச்சை எதிர்கொண்டார்.
Montenegroon நாட்டில் நடைபெற்ற மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரணவ் வெங்கடேஷ் ஏழு வெற்றி, நான்கு டிராவை பெற்று மொத்தம் ஒன்பது புள்ளிகளை பெற்றிருந்தார். இந்த சூழலில் கடைசி சுற்றில் பிரணவ் வெங்கடேஷ் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார் என்ற சூழ்நிலையில் தான் மாட்டிச்சை எதிர்கொண்டார்.

வெள்ளை நிற காயுடன் வெங்கடேஷ் இந்த போட்டியை தொடங்கினார். முதலில் சில காய்களை வெங்கடேஷ் இழந்தார். அதன் பிறகு தான் அது ஸ்லோவன்ய வீரருக்கு விரிக்கப்பட்ட வலை என தெரிந்தது. இதனை சுதாரித்துக் கொண்ட ஸ்லோவன்ய வீரர் தற்காப்பு ஆட்டத்தை கடைப்பிடித்தார். இதன் மூலம் 18 ஆவது நகர்த்தலிலேயே போட்டியை டிரா செய்து கொள்வதாக இருவரும் முடிவு எடுத்தனர்.
இதன் மூலம் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரணவ் வெங்கடேஷ் பிரபல செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் நடத்தும் பெஸ்ட் பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் பயின்று வரும் மாணவர் ஆவார். இவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்திருக்கிறார். இதே தொடரை முதல் முறையாக விஸ்வநாதன் ஆனந்த் 1987 ஆம் ஆண்டு வென்றார்.
அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு ஹரிகிருஷ்ணாவும், 2008 ஆம் ஆண்டு அபிஜித் குப்தாவும் வென்று இருந்தனர். இதை அடுத்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீரர் ஒருவர் வென்றிருக்கிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் தொடரிலும் வெங்கடேஷ் சேலஞ்சர் பிரிவில் வெற்றி பெற்றிருந்தார். வெங்கடேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு செஸ் விளையாட்டில் தலைநகரமாக விளங்குகிறது என்பது மீண்டும் இந்த வெற்றியின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது" என்று பாராட்டியுள்ளார்.
இதேபோன்று விஸ்வநாதன் ஆனந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கடந்த சில காலமாக பிரணவ் வெங்கடேஷ் அபாரமாக விளையாடி வருகிறார். தனது விளையாட்டில் அபாரமாக கவனம் செலுத்தி முன்னேறி வருகிறார். எப்போதுமே நாம் சொல்லும் கருத்துகளையும் கேட்டுக் கொண்டு அதை பின்பற்றுவார். இந்த வெற்றியின் மூலம் மதிப்புக்குரிய உலக ஜூனியர் சாம்பியன் பட்டியலில் பிரணவ் வெங்கடேஷ் இணைந்து இருக்கிறார்" என விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications