டெல்லி : டெல்லியில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி உடன் உஸ்பெகிஸ்தான் வீரர் கை குலுக்க மறுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலியுடன் உஸ்பெகிஸ்தான் வீரர் யாகூப் பலப்பரிட்சை நடத்தினார்.
இந்த போட்டிக்கு முன்பு வைஷாலி தனது இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் யாகூப் தன்னுடைய இருக்கைக்கு வந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக வைஷாலி கைகுலுக்க கையை நீட்டினார்.

ஆனால் யாக்கூப் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் வைஷாலி குழப்பம் அடைந்தார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நிறவெறி காரணமாக உஸ்பெகிஸ்தான் வீரர் யாகூப் இவ்வாறு நடந்து கொண்டாரா என்று கேள்வி எழுந்தது. மேலும் சிலர் சகப் பெண் போட்டியாளருக்கு ஒரு ஆண் என்பதால் யாகூப் மரியாதை தரவில்லை என்று கடுமையாக சாடினர்.
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து தற்போது யாகூப் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் வைஷாலி உடன் நடைபெற்ற போட்டியில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் பெண்களையும் இந்திய செஸ் வீரர்களையும் வெகுவாக மதிக்கின்றேன். நான் வைஷாலி உடன் கை கொடுக்காததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
என்னுடைய இஸ்லாம் மதத்தில் அந்நிய பெண்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது. இதனால்தான் நான் அவரிடம் கை கொடுக்கவில்லை. வைசாலியையும் அவருடைய சகோதரர் பிரக்ஞானந்தாவையும் நான் வெகுவாக மதிக்கின்றேன். என்னுடைய செயலால் நான் அவர்களுக்கு மன வேதனை தந்து இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் என்னுடைய விருப்பம் படியே நான் செய்தேன். மற்றவர்களை இது போல் செய்யுங்கள் என்று நான் வற்புறுத்துவதில்லை. அதே போல் நானும் பெண் போட்டியாளர்களுக்கு கை கொடுப்பதில்லை. இதே போல் பெண்கள் புர்கா அணிந்துதான் வரவேண்டும் என்றும் நான் சொல்வது கிடையாது.இது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை.
இந்தப் பிரச்சினையை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நான் எதிர்த்து விளையாட இருந்த வீராங்கனை இடம் என்னுடைய மத விதிகளையும் அதனால் கைகுலுக்க முடியாது என்பதையும் முன்பே கூறிவிட்டேன்.
அவரும் அதற்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால் நான் கைகுலுக்க வில்லை என்றாலும் வணக்கம் என்று செய்ய வேண்டும் என பலரும் கூறினார்கள். அது எனக்கு தெரியவில்லை. என்னுடைய மத விதிகளை பற்றி முன்பே திவ்யாவிடமும் வைஷாலி இடமும் கூற எனக்கு நேரம் இல்லை என்று யாகூப் கூறியுள்ளார். இந்த நிலையில் வைஷாலிக்கு எதிரான போட்டியில் யாகூப் தோல்வியை தழுவினார். போட்டி முடிந்த பிறகு வைஷாலி மீண்டும் கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.