பெகு : செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் டைபிரேக்கர் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனும் பலப் பரீட்சை நடத்தினர். இதில் முதல் இரண்டு சுற்று ஆட்டங்களும் சமனில் முடிவடைந்த நிலையில் டை பிரேக்கர் முதல் சுற்றின் முதல் ஆட்டம் நடைபெற்றது.

இதில் கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தா கடும் நெருக்கடியை கொடுத்து வந்தார். எனினும் சில காய்களை நகர்த்த அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.இதனை பயன்படுத்திக் கொண்ட கார்ல்சன் அதிரடியாக காய்களை நகர்த்தி பிரக்ஞானந்தாவை முதல் சுற்றில் வீழ்த்தினார்.இதனை அடுத்து வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர்.
கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்றதால் இரண்டாவது ஆட்டத்தில் சமன் செய்தாலே அவர் சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார். இதனால் அவர் ஆரம்பம் முதலே தடுப்பாட்டத்தை பயன்படுத்தினார். ஆட்டத்தின் பத்தாவது நகர்த்தலில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். முக்கிய காய்களை வைத்து பிரக்ஞானந்தாவுக்கு அடுத்தடுத்து கார்ல்சன் நெருக்கடி கொடுக்க ஆட்டம் சமனை நோக்கி சென்றது.
கார்ல்சனுக்கு முதலில் மந்திரியும் பிறகு ராணியும் கிடைக்க அவருடைய வெற்றி பிரகாசமானது. இதனையடுத்து போட்டியை சமனில் முடிக்க பிரக்ஞானந்தா கடுமையாக போராடினார். ஆட்டத்தின் 21 வது நகர்த்தலுக்கு பிறகு பிரக்ஞானந்தாவின் கையில் இருந்து ஆட்டம் நழுவியது. இதனை அடுத்து போட்டியை சமனில் முடிக்க பிரக்ஞானந்தா முயற்சி செய்தார்.
இதில் ஆட்டம் டிராவில் முடிவடைய கார்ல்சன் இரண்டரைக்கு ஒன்றை என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கார்ல்சன் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். 18 வயது ஆன பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி வரை வந்து சாதித்திருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.