பெக்கு: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்துள்ளது.
செஸ் உலகக்கோப்பைத் தொடர் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் 18 வயதான தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான பிரக்ஞானந்தாவை எதிர்த்து விளையாடி வருகிறார். இதன் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். இன்றைய ஆட்டத்திற்கு சில நிமிடங்கள் முன்பாக பிரக்ஞானந்தா வந்து காத்திருக்க, மேக்னஸ் கார்ல்சன் சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய சில நகர்வுகளிலேயே பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இருவரும் தங்களின் குதிரைகளை இழந்தனர். ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேக்னஸ் கார்ல்சன் அடுத்தடுத்து அதிரடியான நகர்வுகளை மேற்கொள்ள, இருவருமே தங்களின் ராணிகளையும் இழந்தனர். இதனால் பிஷப் மற்றும் யானை ஆகிய முக்கிய காய்களுடன் ஆட்டம் தொடர்ந்தது.
இதன்பின் அடுத்தடுத்து 5 நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் தங்களின் யானைகளை இழந்தனர். மேக்னஸ் கார்ல்சனின் ஒவ்வொரு நகர்வும் டிராவுக்கானதாக இருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்ப 30 நகர்வுகளுக்கு பின் டிராவில் முடிவடைந்தது. இதனால் செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி டை பிரேக்கருக்கு சென்றுள்ளது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் நடைபெற்ற நிலையில், ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் நாளை நடக்கவுள்ள டை-பிரேக்கர் சுற்று முடிவில் செஸ் உலகக்கோப்பை தொடரின் வெற்றியாளர் யார் என்பது தெரியும். ஏற்கனவே காலிறுதி மற்றும் அரையிறுதியில் டை பிரேக்கர் வரை சென்று பதற்றமில்லாமல் வென்ற பிரக்ஞானந்தா, நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.