கொழும்பு:இலங்கை ராணுவத்திற்கு சீன ராணுவம் பயிற்சி அளிக்கவுள்ளது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு இதுவரை முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. புலிகளை தாக்குவதாக கூறி அப்பாவித் தமிழர்களையே அது அதிகம் கொன்று குவித்துள்ளது.இலங்கை ராணுவத்தை தரை ரீதியாகவும், கடல் ரீதியாகவும் மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த புலிகள் சமீபத்தில் வான் ரீதியாகவும் பலம் பெற்றனர். 3 முறை வான் வழித் தாக்குதலையும் நடத்தி இலங்கை அரசுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.சில பகுதிகளை இழந்தாலும் கூட விடுதலைப் புலிகள் இன்னும் நிலை குலையாமல் உறுதியாக உள்ளனர். இதனால் அவர்களை சமாளிப்பது எப்படி என்பது தெரியாமல் இலங்கை அரசு விழித்து வருகிறது.இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன் சேகரா யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆனால் அவர் வருகையை முன்னிட்டு பலாலி விமான தளம் மற்றும் காங்கேசன் துறை ராணுவ முகாம்களில் விடுதலைப் புலிகள் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதலில் புலிகள் தரப்பில் நவீன ரகத்தை சேர்ந்த ராக்கெட்டுகளும், பீரங்கி குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.ராணுவ தளபதி வரும் நேரம் குறித்த தகவல்கள் புலிகளுக்கு எப்படி தெரிந்தது என்பது இலங்கை ராணுவத்தினருக்கு இன்னமும் புரியாத புதிராக உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ராணுவத்தில் யாரேனும் உளவாளிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த நிலையில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு நாடுகளிலிருந்து ராணுவத் தளவாடங்ளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது.மேலும் சீன ராணுவத்திடமிருந்து இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க சீனாவும் முன்வந்துள்ளது. இதற்காக சீன ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வருகிறார்கள்.முன்பு போர் உத்திகள் குறித்து இஸ்ரேல் ராணுவம், இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தது. ஆனால் புலிகளின் வேகத்தைப் பார்த்த இஸ்ரேல் ராணுவம், அவர்களை வெல்வது எளிதல்ல என்று கூறியது நினைவிருக்கலாம்.