நியூயார்க்: WWE வரலாற்றில் பெண் மல்யுத்தப் பிரிவில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவரும், லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தவரும், 'தி வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்று வர்ணிக்கப்பட்ட சிஎம் பங்க்-ன் மனைவியுமான ஏஜே லீ, தனது புகழின் உச்சியில் இருந்தபோது திடீரென மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆண்டுகளாக WWE பக்கமே வரவில்லை.
சிஎம் பங்க் மீண்டும் WWE-இல் இணைந்த போது ஏஜே லீயும் அவருடன் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களும் WWE நிகழ்ச்சிகளின்போது கோஷமிட்டு வந்தனர். அப்போதும் ஏஜே லீ WWE அரங்கிற்கு வரவில்லை. ஏன்?

ஏப்ரல் ஜீனெட் மெண்டெஸ் என்ற இயற்பெயர் கொண்ட ஏஜே லீ, WWE-ல் வெறும் ஒரு மல்யுத்த வீராங்கனையாக மட்டும் வலம் வரவில்லை. அவர் WWE Divas சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வென்றவர். ஒரு கட்டத்தில், 295 நாட்கள் தொடர்ந்து பட்டத்தை தக்கவைத்து, அதிக நாட்கள் சாம்பியனாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார்.
ஏஜே லீ-யின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அவரது வித்தியாசமான 'ஜீக் காடஸ்' (Geek Goddess) மற்றும் 'கிரேஸி சிக்' (Crazy Chick) கதாபாத்திரம் தான். மற்ற வீராங்கனைகள் போல் இல்லாமல், ஜீன்ஸ் ஷார்ட்ஸ் மற்றும் கான்வர்ஸ் ஷூக்களுடன் வலம் வந்த அவரது பாணி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
களத்தில் மன ரீதியாக நிலையற்றவர் போலவும், கணிக்க முடியாதவராகவும் அவர் நடித்த விதம், அவரை WWE-ன் முக்கியக் கதைக்களங்களுக்குக் கொண்டு சென்றது. டேனியல் பிரையன், கேன் மற்றும் சிஎம் பங்க் போன்ற ஜாம்பவான்களுடன் காதல் கதைக்களங்களில் ஈடுபட்டு, ஆண் மல்யுத்தப் பிரிவிலும் முக்கியத்துவம் பெற்றார்.
ஏஜே லீ தனது கடைசிப் போட்டியை ரெஸ்ஸில்மேனியா 31-க்கு அடுத்த நாள், ஏப்ரல் 3, 2015 அன்று விளையாடினார். அதன் பிறகு, அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக WWE அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு முக்கியமான காரணம் சிஎம் பங்க், WWE நிர்வாகத்துடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் நிறுவனத்தை விட்டு வெளியேறியது தான். இதற்குப் பிறகு, ஏஜே லீ மிகவும் சங்கடமான நிலையில் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர் களத்திற்கு வரும்போதெல்லாம் ரசிகர்கள் "சிஎம் பங்க்" என்று கோஷமிட்டனர். இது நிர்வாகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அவருக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தொடர் காயங்களும் அவர் ஓய்வு பெற மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது. ஏஜே லீ தனது சுயசரிதையில், தனது கழுத்துத் தண்டுவடத்தில் நிரந்தரப் பாதிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மல்யுத்தத்தில் ஈடுபட்டால், காயம் தீவிரமாகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், அவர் இந்த கடினமான முடிவை எடுத்தார்.
மல்யுத்தத்தில் தான் அடைய நினைத்த அனைத்தையும் சாதித்துவிட்டதாக ஏஜே லீ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சாம்பியன் பட்டங்களை வென்றது, முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது என தனது கனவுகளை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அவர் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஏஜே லீ தனது மற்றொரு திறமையான எழுத்துத் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் எழுதிய "Crazy Is My Superpower" (கிரேஸி இஸ் மை சூப்பர்பவர்) என்ற சுயசரிதை, நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையான புத்தகங்கள் பட்டியலில் இடம்பிடித்தது. இந்தப் புத்தகத்தில் தனது மல்யுத்த வாழ்க்கை மற்றும் மனநலம் தொடர்பான தனது போராட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தனது சொந்த அனுபவங்களிலிருந்து, மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், தனது தோழியும் நடிகையுமான ஐமீ கார்சியாவுடன் இணைந்து 'ஸ்க்ராப்பி ஹார்ட் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். காமிக் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான திரைக்கதைகளை எழுதி வருகிறார்.