உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு கோயம்புத்தூர் மாணவர் இன்பா தினேஷ்பாபு தகுதி.. U-9 தொடரில் 9வது இடம்
கோவை: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 9 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் அசத்திய கோயம்புத்தூர் மாணவர் இன்பா தினேஷ்பாபு, உலக மற்றும் ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உலக சதுரங்க கூட்டமைப்பு (FIDE) மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு (AICF) இணைந்து நடத்தும் 39வது தேசிய 9 வயதுக்குட்பட்டோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜூலை 6 முதல் 12 வரை நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளம் சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கோவை இந்துஸ்தான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 4ஆம் வகுப்பு மாணவர் இன்பா தினேஷ்பாபு, 11 சுற்றுகளில் விளையாடி 8 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 9வது இடத்தை பிடித்து அசத்தினார்.
போட்டி விதிமுறைகளின்படி, முதல் 40 இடங்களைப் பெறும் வீரர்கள் இந்தியா சார்பில் சர்வதேச அளவில் நடைபெறும் உலக இளைஞர் சதுரங்கப் போட்டி மற்றும் ஆசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். இதன் மூலம் தேசிய அளவில் 9வது இடம் பெற்ற இன்பா தினேஷ்பாபு, இந்த இரு சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இளம் வயதில் சர்வதேச அரங்கில் தடம் பதிக்க உள்ள இன்பா தினேஷ்பாபுவுக்கு அவரது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள், அவரது பயிற்சியாளர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
