காமன்வெல்த் கிராமத்தில் உடைத்த பர்னிச்சர்களுக்கு காசு கொடுங்க.. இந்திய ஒலிம்பிக் சங்கம்!
டெல்லி : கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கான செலவை கேட்டுள்ளது, இந்திய ஒலிம்பிக் சங்கம். இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் இது போன்ற சேதங்களை ஏற்படுத்துவது, நமது நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா அறிவுறுத்தி உள்ளார்.
2018 காமன்வெல்த் போட்டிகள் நடந்த ஆஸ்திரேலியா, வீரர்கள் தங்குவதற்கு என தனி கிராமத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறைகளில் சேதம் ஏற்படுத்தியதாக கூறி உள்ளது காமன்வெல்த் கேம்ஸ் நிர்வாகம். இதற்காக பல்வேறு சேதங்களை பட்டியலிட்டு மொத்தமாக ₹73,988ஐ இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் கேட்டுள்ளது.

இதில் குளிர்சாதனத்திற்கான வாடகை தவிர்த்து, வீரர்கள் ஏற்படுத்திய சேதம் என்ற வகையில் சுமார் ₹59,262ஐ சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இருந்து பெற்றுத் தருமாறு கோரியுள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.
இது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பத்ரா எழுதியுள்ள கடிதத்தில், “அனைத்து விளையாட்டு அமைப்புகளும் இந்த சேதங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வீரர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேச வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நம் நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இந்த அடிப்படை விஷயங்கள் குறித்து ஏசியன் கேம்ஸில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு அமைப்பும் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்க வேண்டும். இனி வரும் அனைத்து போட்டிகளுக்கும் இதை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
எந்த அறையில் சேதம் நடந்தது, எந்த விளையாட்டு வீரர்கள் அங்கே தங்கியிருந்தார்கள், எவ்வளவு சேதத்தொகை செலுத்த வேண்டும் என்ற கணக்குகள் தெரிய வந்துள்ளது. அதன்படி, பேஸ்கட்பால் - ₹20,400, தடகளம் - ₹11,832, ஹாக்கி - ₹7,854, துப்பாக்கி சுடுதல் - ₹5.100, பளு தூக்குதல் - ₹5,100, ஸ்குவாஷ் - ₹3,876, டேபிள்டென்னிஸ் - ₹2,550 வழங்க வேண்டும். இதில் சாவியை உடைத்ததற்காக மட்டும் ₹28,055 கேட்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசிய ஒரு விளையாட்டு அமைப்பின் அதிகாரி, “அவர்கள் கூறுவது நம்பமுடியாத சேதமாக உள்ளது. எதற்காக ஒருவர் சாவியையும், தாங்கள் வசிக்கும் இடத்தின் கதவையும் சேதப்படுத்த வேண்டும்? இது போன்ற சேதங்களுக்கு என ஒருங்கிணைப்பாளர்கள் பணம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் செலுத்த முடியாத அளவுக்கு தொகை பெரிதாக இல்லை. ஆனால், இந்த விஷயம் எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது” என தெரிவித்தார்.
Story first published: Friday, July 27, 2018, 10:46 [IST]
Other articles published on Jul 27, 2018


Click it and Unblock the Notifications