காமன்வெல்த் போட்டிகள் தொடக்கவிழா 2026.. இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்ற மீராபாய் சானு
கிளாஸ்கோ: விளையாட்டு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்கியது. கிளாஸ்கோ நகரின் ஹைட்ரோ அரங்கில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
126 வீரர்கள் அடங்கிய இந்திய வீரர்கள் குழு கம்பீரமாக அணிவகுத்துச் சென்றது. இந்தியக் குழுவின் அணிவகுப்பில் ஒலிம்பிக் பதக்க நாயகி மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்திச் செல்ல, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் பாரம்பரியமிக்க 'கிங்ஸ் பேட்டன்' ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினர். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்த அணிவகுப்பில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந்த தொடக்க விழாவை இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தொடங்கி வைக்கும் விதமாக முதலில் மேடை ஏறினர். அதைத் தொடர்ந்து யுனைட்டெட் கிங்டம் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முதலில் ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் அணிவகுப்பை நடத்தின. போட்ஸ்வானா முதல் நாடாக அணிவகுப்பை செய்தது. அடுத்து கேமரூன் நாட்டின் வீரர்கள் குழு தங்கள் நாட்டின் கொடியை ஏந்திச் சென்றனர்.
இந்த முறை புதிதாக இடம் பெற்றுள்ள காபோன் அடுத்து அணிவகுத்து சென்றது. தொடர்ந்து கானா, கென்யா, நமீபியா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் அணிவகுத்து சென்றன. ஜாம்பியா சென்றதை அடுத்து அமெரிக்க பகுதியை சேர்ந்த பஹாமாஸ் மற்றும் ஃபாக்லாந்து தீவுகள் அணிவகுத்து சென்றன. அடுத்து ஆசிய நாடுகள் அணிவகுப்பு தொடங்கியது.
முதல் ஆசிய நாடாக வங்கதேசம் அணிவகுத்தது. அடுத்து ப்ரூனெய் சென்றது. மூன்றாவதாக 126 பேர் கொண்ட இந்திய குழுவினர் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். கிங்ஸ் பாட்டனை இந்தியாவின் லவ்லினா ஏந்திச் சென்றார். அப்போது பெரும் ஆரவாரம் எழுந்தது. தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் சென்றன.
அடுத்ததாக கரீபிய நாடுகள் அணிவகுத்து சென்றன. அதில் பல நாடுகள் அணிவகுத்த நிலையில் செயின்ட் லூசியா நாட்டின் சார்பில் ஒரே ஒரு வீரர் மட்டுமே பங்கேற்றார். அவரே தேசியக் கொடி மற்றும் பாட்டன் ஆகியவற்றை ஏந்திச் சென்றார். அதனால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அங்கு இருந்த ரசிகர்கள் பெரும் குரல் எழுப்பி கைதட்டினர். பின்னர் ஆஸ்திரேலியா, பிஜி தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அணிவகுத்தன.
இறுதியாக ஐரோப்பிய நாடுகள் அணிவகுப்பு நடைபெற்றது. கடைசி நாடாக இந்த முறை காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் ஸ்காட்லாந்து அணிவகுத்து சென்றது. பின்னர் ஸ்காட்லாந்து நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் முடிவில் காமன்வெல்த் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சார்பில் மூன்று விதமான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. பின்னர் காமன்வெல்த் விளையாட்டின் தலைவர் டொனால்ட் ருகாரே பேசினார். அவர், "விளையாட்டு மக்களை அதிகாரத்திற்கு கொண்டு செல்லும் சக்தி உடையது. உலகம் பிரிந்து கிடப்பதாக நினைக்கும் போது இது மிகவும் அவசியம் ஆகிறது. காமன்வெல்த் வெறும் பதக்கம் வெல்லும் விளையாட்டு அல்ல. பல வாழ்நாளின் சிறந்த தருணங்களை உருவாக்கும் விளையாட்டு. வெற்றியில் தாராள மனதுடன் இருங்கள், தோல்வியில் கருணையுடன் இருங்கள், அடுத்த சில நாட்கள் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்ததாக இருக்கும்." என்றார்.
அடுத்து கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டிகளுக்கான தலைவர் ஜார்ஜ் பிளாக் பேசுகையில், "இந்த காமன்வெல்த் நட்புக்கான நகரத்தில், நட்பு தேசத்தில் மிகவும் நட்பான விளையாட்டாக இருக்கும். ஏனென்றால் அதுதான் நாங்கள். நகரம் (கிளாஸ்கோ) தயாராக உள்ளது, தேசம் (ஸ்காட்லாந்து) தயாராக உள்ளது. அன்புக்குரிய விளையாட்டு வீரர்களே, இந்த மேடை உங்களுடையது" என்றார்.
அடுத்து பிரிட்டிஷ் அரசர் சார்லஸ் பேசினார். "விளையாட்டு வீரர்களையும், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களையும் (para-athletes) மீண்டும் பார்ப்பது, காமன்வெல்த் என்பது நாடுகளின் ஒரு அழகான கூட்டமைப்பு என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் உங்களது சாதனைகளைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த விளையாட்டுப் போட்டிகளில் நாம் கவனம் செலுத்த விரும்பும் பிற முக்கிய விஷயங்களைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
நெகிழி (plastic) பயன்பாட்டைக் குறைப்பது, பெருங்கடல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றிற்கு தொடர்ச்சியான பிரத்யேக நடவடிக்கைகள் மூலம் முன்னுரிமை வழங்கப்படும். இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரு இணக்கமான எதிர்காலத்தை நாம் இணைந்து உருவாக்குவோம். 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்." என்று பிரிட்டிஷ் அரசர் சார்லஸ் கூறினார். அத்துடன் 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரின் தொடக்க விழா நிறைவு பெற்றது.


Click it and Unblock the Notifications