உலக சாம்பியனை வீழ்த்திய 43 வயது இந்திய வீரர்.. காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு வெற்றித் தொடக்கம்
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கிய 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், முதல் நாள் அன்று லான் பவுல்ஸ் பிரிவில் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய அணி வெற்றிகரமான கணக்கைத் தொடங்கியுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு டி லீக் ஆட்டத்தில், 43 வயதில் முதல்முறையாக காமன்வெல்த் தொடரில் ஆடிய ஆசிய சாம்பியனான இந்திய வீரர் புதுல் சோனோவால், நடப்பு உலக சாம்பியனான கனடாவின் ரியான் பெஸ்டரை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் செட்டை புதுல் சோனோவால் 5-4 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-3 எனக் கனடா வீரர் வென்றதால் ஆட்டம் சமநிலை அடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற டை-பிரேக்கரில் அபாரமாக விளையாடிய புதுல் சோனோவால், உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றார். இவர் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் ஃபாக்லேண்ட் தீவுகளின் சிசில் அலெக்சாண்டரை எதிர்கொள்கிறார்.
இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவு பி லீக் ஆட்டத்தில், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய இணையான பிங்கி சிங் மற்றும் ரூபா ராணி திர்கி ஆகியோர் மால்டாவின் கோனி ரிக்சன் மற்றும் ரெபேக்கா ரிக்சன் இணையுடன் மோதினர். முதல் செட்டை 7-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றிய இந்திய இணை, இரண்டாவது செட்டை இழந்தது. பின்னர் டை-பிரேக்கரில் பிங்கி சிங் துல்லியமாக வீசிய கடைசி பந்தின் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. இவர்கள் வெள்ளிக்கிழமை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக லான் பவுல்ஸ் போட்டிகள் முழுவதும் உள்அரங்கில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்சி முறையில் நடைபெறும் லீக் சுற்றுகளில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். 2026 காமன்வெல்த் போட்டிகளின் முதல் நாள் அன்று இந்தியா பங்கேற்ற இரண்டு விளையாட்டுகளிலும் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
