டெல்லி: காமன்வெல்த் போட்டியின் ஆடவருக்கான 4X100 மீ. தொடர் நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
நீச்சலில் பெரும் சாதனை படைக்க இந்தியா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் 4X100 மீ. ப்ரீஸ்டைல் தொடர் நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி முன்னேறியுள்ளது.
விர்த்வால் காடே தலைமையிலா இந்திய அணி இன்று நடந்த தகுதிப் போட்டியின்போது 3:28.06 என்ற கணக்கில் இலக்கை எட்டியது. இச்சுற்றில் 6வது இடத்தைப் பிடித்தது இந்தியா.
இந்திய அணியில் விர்த்வால் தவிர ஆரோன் டிசோசா, அர்ஜூன் ஜெயப்பிரகாஷ், அன்சுல் கோத்தாரி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
அதேபோல ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் பத்ரிநாத் மெல்கோட்டே 27.52 நிமிடங்களில் இலக்கை எட்டி அரை இறுதிக்கு முன்னேறினார்.
மகளிருக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சுபா சித்தரஞ்சன் 29.96 நிமிடங்களில் இலக்கை எட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
அதேசமயம், மகளிருக்கான 200 மீட்டர் ப்ரீஸ்டைல், ஆடவருக்கான 400 மீட்டர் ப்ரீஸ்டைல், மகளிருக்கான 200 மீட்டர் தனி நபர் மெட்லி, ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை, மகளிருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் ஆகியவற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.