டெல்லி: ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2023ம் ஆண்டு இந்தியா தனித்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தனித்து நடத்த உள்ளது. இதேபோல 2016ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மற்றும், 2021ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்தடுத்த போட்டிகளால், 7 வருட இடைவெளியில் 3 மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்களால் நேரில் கண்டு ரசிக்க முடியும். இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம், பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து போட்டித் தொடரை இந்தியா நடத்தியது. 2023 உலக கோப்பையை இந்தியா தனித்து நடத்த உள்ளது.
2015ம் ஆண்டு அதாவது அடுத்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்தும், 2019ம் ஆண்டு உலக கோப்பையை, இங்கிலாந்தும் நடத்த உள்ளது.