யாருடா அந்த கோரி??... புத்தாண்டில் டென்ஷனுடன் கண் விழித்த அப்ரிடி!
கராச்சி: புத்தாண்டு தினத்தன்று ஷாஹித் அப்ரிடிக்கு குழப்பமான காலையாகவே மலர்ந்தது. காலையில் கண் விழித்து எழுந்த அவரிடம் உங்களது அதி வேக சத சாதனையை கோரி ஆண்டர்சன் முறியடித்து விட்டார் என்று செய்தி வரவே, யாரு அந்த கோரி, கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று குழம்பிப் போய் விட்டாராம் அப்ரிடி.
நியூசிலாந்தின் இளம் வீரர் கோரி ஆண்டர்சன், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது 36 பந்துகளில் சதமடித்து அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.
அதற்கு முன்பு அப்ரிடி 37 பந்துகளில் சதம் போட்டதே ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக சதம் போட்ட சாதனையாக இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

கேள்விப்படாத பெயரா இருக்கே
அப்ரியிடிம் உங்களது சாதனையை கோரி முறியடித்து விட்டார் என்று தகவல் சொல்லப்பட்டபோது கோரியா யாரு அது... கேள்விப்பட்ட பெயராகவே இல்லையே.. எந்த நாடு என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம்.

ஆனாலும் சாதனைதான்
இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், எனது உறவினர் ஒருவர்தான் காலாங்கார்த்தாலே என்னை எழுப்பி இந்தத் தகவலைச் சொன்னார். அதைக் கேட்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். யாரு இந்த கோரி, எந்த நாடு என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் இது நிச்சயம் பெரிய சாதனைதான். கோரி ஆண்டர்சன் பாராட்டுக்குரியவர். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

பெரிய தில்லு வேண்டும்
36 பந்துகளில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு தில் வேண்டும். திறமை வேண்டும். அதை கோரி நிரூபித்திருக்கிறார்.

ஆனா அதுக்குள்ளே சாதனை போச்சே
எனது சாதனை கடந்த 17 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்து வந்தது. இன்னும் கொஞ்ச காலம் அப்படியே இருக்கும் என்று நினைத்திருந்தேன். எல்லோருமேக்கு அப்படித்தானே ஆசை இருக்கும். பரவாயில்லை, இப்போது முறியடிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் நான் ஓய்வு பெறும் வரை இது முறியடிக்கப்படாமல் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார் அப்ரிடி.


Click it and Unblock the Notifications