டெல்லி: காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளான இன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதில் இரண்டு பிரிவிலும் கென்கயர்களே தங்கம் வென்றுள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் இது தான் கடைசி தடகளப் போட்டியாக அமைந்தது.
ஆண்கள் பிரிவில் ஜான் எல்கிரு கெலாய் 42.195 கிமீ தூரத்தை 2 மணி நேரம் 14 நிமிஷம் 35 வினாடிகளில் கடந்தார். இதே பிரிவில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஷெல்லி 2 மணி நேரம் 15 நிமிஷம் 18 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், கென்யாவைச் சேர்ந்த அமாஸ் டிராப் மடூஸ் 2 மணி நேரம் 15 நிமிஷம் 58 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதில் இந்தியாவின் ராம் சிங் யாதவும், பினிங் லிங்காயும் 8 மற்றும் 9 இடத்தையே பிடித்தனர். இதில் ராம் 2 மணி நேரம் 21 நிமிஷம் 24 வினாடிகளிலும், பினிங் 2 மணி நேரம் 23 நிமிஷம் 01 வினாடியிலும் கடந்தனர்.
பெண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கென்யர்கள் வென்றார்கள். கென்யாவின் ஐரீன் காஸ்கெய் 2 மணி நேரம் 34 நிமிஷம் 32 வினாடிகளில் கடந்து தங்கத்தையும், ஐரீன் மொகாகி 2 மணி நேரம் 34 நிமிஷம் 43 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். ஆஸ்திரேலியாவின் லிசா வெய்ட்மேன் 2 மணி நேரம் 35 நிமிஷம் 25 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.