டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணி, இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.
காயங்களுடன் அவதிப்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி இல்லாத நிலையில் மிகவும் இக்கட்டான நிலையில் டெல்லியைச் சந்திக்கிறது.
மறுபக்கம் 2 வெற்றி ஒரு தோல்வி என்ற கணக்குடன் நான்காவது போட்டியை வெல்லும் வேகத்துடன் டெல்லி அணி, சென்னையுடன் மோதவுள்ளது.
டெல்லிக்கு வெளியே நடந்த போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளைத் தோற்கடித்தது டெல்லி. அதேசமயம், டெல்லியில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியில் கேப்டன் கம்பீர் காயத்துடன் அவதிப்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
சென்னை அணியும் காயத்தால் கஷ்டப்பட்டு வருகிறது. இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ள சென்னை கொல்கத்தாவை வென்றுள்ளது. அதேசமயம், சென்னையில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸிடம் தோல்வியுற்றது.
கேப்டன் டோணி காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆட மாட்டார்.
டெல்லி அணி மும்பையிடம் சறுக்கினாலும் கூட மற்ற இரு போட்டிகளிலும் மிகவும் எளிதான முறையில் வென்றுள்ளது.
அதேசமயம், சென்னை அணி தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறது.
சென்னையின் பந்து வீச்சும், பேட்டிங்கும் சற்று பலவீனமாகவே உள்ளது. ஏற்கனவே மைக் ஹூஸே இல்லை. ஜேக்கப் ஓரம் இல்லை. மாத்யூ ஹெய்டன் தடுமாறுகிறார். டோணியும் இப்போது காயமடைந்து விட்டார்.
எனவே முரளி விஜய், பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் கைகளில்தான் ரன் குவிப்பு உள்ளது.
இரு அணிகளிடமும் சில பலவீனங்கள் உள்ளன. அதைத் தாண்டி எப்படி இரு அணிகளும் விளையாடப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.