டெல்லி: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின்போது கையில் ஏற்பட்ட காயத்தால் வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா நாளை துவங்கும் ஐபிஎல் 4-வது சீசனின் முதல் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார்.
ஐபிஎல் 4-வது சீசன் நாளை துவங்குகிறது. இதில் வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே வாரியர்ஸ் அணியில் உள்ளார்.
உலகக் கோப்பையில் மொகாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது நெஹ்ராவின் வலது கை விரலில் பலமான காயம் ஏற்பட்டது. அதனால் அவர் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் விளையாடினார்.
இது குறி்த்து ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
காயம் காரணமாக ஆசிஷ் வெஹ்ரா ஐபிஎல் 4-வது சீசனின் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார். ஆனால் அவர் எத்தனை போட்டிகளில் விளையாடமாட்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
வரும் 10-ம் தேதி நவி மும்பையில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் பயணத்தை துவங்குகிறது புனே வாரியர்ஸ். இதைத்தொடர்ந்து வரும் 13-ம் தேதி மும்பையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலுமே நெஹ்ரா விளையாடமாட்டார்.