ரியோ டி ஜெனிரோ: வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏழாவதி நாளான இன்று வில்வித்தை தனிநபர் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள இந்தியாவின் தீபிகா குமாரி ரவுண்ட்-64 சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் 6-4 (27-26, 29-29, 30-27, 29-27, 29-29) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட்-32 சுற்றுக்கு முன்னேறினார்.
ரவுண்ட்-32 சுற்றில் தீபிகா, இத்தாலியின் சர்டோரியை எதிர்கொண்டார். இதில் 6-2 (24-27, 29-26, 28-26, 28-27) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இச்சுற்றில் தீபிகா, சீன தைபே வீராங்கனை டன் யா-டிங்கை எதிர்கொள்கிறார். இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள மற்றொரு இந்திய வீராங்கனை பொம்பைலா தேவி மெக்சிகோ வீராங்கனையை இன்று சந்திக்கிறார். இந்த போட்டி மாலை 6.06 மணிக்கு நடைபெறுகிறது.