மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன. இதில், காம்பவுண்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் அபிஷேக் வர்மா, இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த துருக்கி வீரர் டெமிருடன் மோதினார். ஆனால், 145க்கு 143 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து அபிஷேக் வர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வர்மா பெற்றார். வர்மா ஆசிய வில்வித்தை தனி நபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பதுடன், இதற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பையிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.
இதேபோல் இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இறுதிப்போட்டியில் 19 வயதே ஆன கொரியாவின் சோய் மிசுவுடன் மோதினார். உலகக்கோப்பை வில்வித்தை போட்டிகளில் மூன்று முறை வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா, வில்வித்தை உலகப்கோப்பை போட்டிகளில முதல்முறையாக கலந்து கொண்ட சோய் மிசுவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இருவரும் ஒரே புள்ளிகள் பெற்றிருந்த சூழலில் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 6-4 என்ற புள்ளிகணக்கில் சோய் மிசு வெற்றி பெற்றார்.