ரியோடி ஜெனிரோ: 2010ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் இம்முறை முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

2014ம் ஆண்டுக்கான ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கடந்த 2010ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் துவக்கத்தில் இருந்தே சொதப்பலாக விளையாடியது.

முதல் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்த ஸ்பெயின் 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் ஸ்பெயின் ரசிகர்கள் மனமுடைந்தனர். நடப்பு சாம்பியனான ஒரு அணி அடுத்த உலகக் கோப்பையில் எடுத்த உடனே இப்படி படுதோல்வி அடைந்தது இல்லை.

இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் சிலி ஆகிய நாட்டு அணிகள் மோதும் போட்டி நேற்று இரவு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியிலாவது ஸ்பெயின் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் ஸ்பெயினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. சிலி 2 கோல்கள் போட்டு ஸ்பென் அணியை உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து பேக் செய்தது.

நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி 5 நாட்களில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.