டெல்லி: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மையமாக வைத்து நடைபெற்ற சூதாட்டம் கொலையில் முடிந்துள்ளது. டெல்லியில் சூதாட்ட பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலதிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் தருண் பஜாஜ் இவர் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சூதாட்ட பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட தருண் பஜாஜ், ராஜேந்தா நகர் பகுதியில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் பாக்கி வைத்து இருந்ததால் இவர் மாஸ்டர் புக்கி எனப்படும் பெரிய சூதாட்ட தரகர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது இவரால் ஏமாற்றப்பட்டவர் கொன்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 12 சூதாட்ட தரகர்களை இதுவரை போலீசார் விசாரித்து உள்ளனர். இவர்களில் மூவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய தரகர்கள் ஆவார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை மையமாக வைத்து இந்தியாவில் மிகப்பெரிய சூதாட்டம் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.