காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி-பென்னல் பாராட்டு

கேம்ஸ் வில்லேஜ் சரியில்லை, அங்குள்ள கக்கூஸ் சரியில்லை, பாம்பு ஓடுகிறது, தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது, அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கூறி ஒரேயடியாக புகார்களாகக் கூறிவந்தனர் பென்னல் உள்ளிட்ட பலர். அத்தோடு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் கூறி பல முன்னணி அணிகள் போட்டியில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறி டபாய்த்தன.
ஆனால் போட்டியின் தொடக்க விழாவைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர். அதேசமயம், கேம்ஸ் வில்லேஜில் செய்யப்பட்டிருந்த வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் வெளிநாட்டுக்காரர்களை மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படுத்தியது. இப்போது போட்டியும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.
இந்தநிலையில் நேற்று கடைசி முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த பென்னல் டெல்லியை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறுகையில், மிகவும் திறம்பட செயலாற்றியுள்ளது டெல்லி. ஒட்டுமொத்த போட்டியையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. டெல்லியின் இந்த திறமை பாராட்டுக்குரியது.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தியாவுக்குப் போவதா, வேண்டாமா என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர். ஆனால் அத்தனை அவதூறுகளையும் டெல்லி நிர்வாகம் அப்படியே அப்புறப்படுத்தி விட்டது, சிறப்பான போட்டியாக இதை மாற்றி விட்டது.
நான் செப்டம்பர் 23ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டபோது பலரும் என்னிடம் போட்டியை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடப் போகிறீர்களா என்று கூட கேட்டனர். அந்தஅளவுக்கு பிரச்சினைகள் அப்போது இருந்தன.
ஆனால் அதற்கு அவசியமே இல்லாத வகையில் சிறப்பான முறையில் டெல்லி நிர்வாகம் ஏற்பாடுகளை முடுக்கி விட்டு போட்டியையும் சிறப்பாக முடித்துள்ளது என்றார் பென்னல்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications