டெல்லி: வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ராவை 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் டோணி நீக்கியதை வீரேந்திர ஷேவாக் விரும்பவில்லையாம். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் இரண்டு கோஷ்டிகள் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்தக் காலத்தில் கபில் தேவ் தலைமையில் ஒரு கோஷ்டியும், கவாஸ்கர் தலைமையில் ஒரு கோஷ்டியும் இருந்தன.
பின்னர் கங்குலி தலைமையில் ஒரு கோஷ்டியும், சச்சின் தலைமையில் ஒரு கோஷ்டியுமாக இது புதிய பரிமாணத்தை எடுத்தது.
அந்த வரலாற்றின் அடிப்படையில் தற்போது ஷேவாக் கோஷ்டி, டோணி கோஷ்டி என இரண்டு பிரிவாக பிளந்து போய்க் கிடக்கிறதாம் இந்திய அணி.
கடந்த ஆண்டு நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போதுதான் இந்த கோஷ்டி உதயமானது.
அப்போது காயத்தை மறைத்து அணியில் இடம் பெற்றதாக ஷேவாக் மீது குற்றம் சாட்டினார் டோணி.
இதனால் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்தார் டோணி. மேலும், மொத்த வீரர்களையும் பத்திரிக்கையாளர்கள் முன்பு நிறுத்தி அணியின் ஒற்றுமையை பறை சாற்றினார்.
இந்த நிலையில் தற்போது வங்கதேசத்தில் வைத்து மீண்டும் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக டோணி இடம் பெறவில்லை. கேப்டன் பொறுப்பை ஷேவாக் கவனித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், டெல்லியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டிக்கு டோணி வந்து விட்டார். வந்தவர் மிஸ்ராவை முதல் வேலையாக நீக்கி விட்டு பிரக்யான் ஓஜாவை சேர்த்து விட்டார். இது ஷேவாக்கை கடுப்பாக்கி விட்டதாம்.
மிஸ்ராவை விட ஓஜா தான் சிறப்பானவராக இருப்பார் என்று கூறி அணி நிர்வாகத்தை சமாதானப்படுத்தி விட்டு மிஸ்ராவை தூக்கி விட்டாராம் டோணி. இது ஷேவாக்குக்குப் பிடிக்கவில்லையாம். டெல்லி வீரர் என்பதால்தான் மிஸ்ராவை அவர் தூக்கி விட்டதாக ஷேவாக் புலம்புகிறாராம்.
சிறப்பாக பந்து வீசிய நிலையில் மிஸ்ராவை தூக்கியிருப்பது அவரை மிகவும் நோகச் செய்யும் என்கிறார் ஷேவாக். முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தியதோடு, 64 ரன்களையும் எடுத்தார் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
2வது டெஸ்ட் போட்டியிலும் மிஸ்ராதான் இடம் பெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில்தான் ஓஜாவை நுழைத்து விட்டார் டோணி என்கிறார்கள்.
இதுதொடர்பாக ஷேவாக்குக்கும், டோணிக்கும் இடையே சூடான விவாதமும் நடந்ததாக கூறப்படுகிறது.