தீபிகாவை 2 முறை மணக்கப் போகும் தினேஷ் கார்த்திக்
சென்னை: பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட நிலையில் இருவரது திருமணம் குறித்த பேச்சுக்கள் சூடு பிடித்துள்ளன.
இந்த நிலையில் இவர்களது திருமணம் இரு மத முறைப்படி நடக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேஷ் கார்த்திக் இந்து. தீபிகா, கிறிஸ்தவர். எனவே இரு மத முறைப்படியும் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனராம்.

2013 முதல் காதல்
2013ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார்கள் தினேஷும், தீபிகாவும். இங்கிலாந்தில் வைத்து பூத்தது இந்தக் காதல். இங்கிலாந்தில் தீபிகா பயிற்சிக்காக சென்றிருந்தபோது அங்கு அவரைச் சந்தித்து தனது காதலைக் கூறி அவரிடம் புரபோஸ் செய்தார் தினேஷ்.

இரு வீட்டார் பச்சைக் கொடி
இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தனர். தினேஷுக்கு இது 2வது திருமணம். தீபிகாவுக்கு முதல் திருமணமாகும்.

இரு மத முறைப்படி திருமணம்
இவர்களது திருமணத்தை இரு மத முறைப்படி நடத்தவுள்ளனராம். தீபிகா கிறிஸ்தவர் என்பதால் அந்த மத முறைப்படியு்ம், தினேஷ் கார்த்திக் இந்து என்பதால் அந்த மத முறைப்படியும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

ஆகஸ்ட் 18ம் தேதி கிறிஸ்தவ திருமணம்
முதலில் ஆகஸ்ட் 18ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் இத்திருமணம் நடைபெறுகிறது.

20ம் தேதி நாயுடு முறைப்படி
அதன் பின்னர் 20ம் தேதி தெலுங்கு நாயுடு முறைப்படி சென்னையில் 2வது திருமணம் நடைபெறுகிறது. இரண்டு திருமண வைபவங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தீபிகாவின் தந்தை சஞ்சீவ் பல்லிகல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications