தோஹா டைமண்ட் லீக் ஒத்திவைப்பு.. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ஏமாற்றம்.. என்ன காரணம்?
டெல்லி: மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கத்தாரில் நடைபெற இருந்த தோஹா டைமண்ட் லீக் தடகள போட்டி ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஆட்டத்தை காண காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலக தடகள போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமண்ட் லீக். நடப்பு 2026ம் ஆண்டு சீசனின் முதல் சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் மே 8ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். தோஹா மைதானம் அவருக்கு மிகவும் ராசியான ஒன்று. இங்கு நடந்த பல போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த முறை தோஹாவில் நடந்த போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெப்பரிடம் நூலிழையில் முதலிடத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா, இந்த முறை நிச்சயம் தங்கம் வென்று சாதிப்பார் என இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், வளைகுடா நாடுகளில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, தடகள வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 8ம் தேதி நடக்க இருந்த போட்டி ஜூன் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் சீரடைந்தால் மட்டுமே போட்டி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் 2026 சீசனின் 8வது சுற்றாக தோஹா டைமண்ட் லீக் நடைபெறும்.
மேலும், ஜூன் மாதத்தில் கத்தாரில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதால், போட்டியின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது. முதலில் கத்தார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, தற்போது அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட கலிபா சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தான் 2019 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2022 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications