7வது இடம்
இந்நிலையில், இன்று காலை மற்றொரு மிக முக்கியமான போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 100.மீ ஓட்டப்பந்தய போட்டி. Women's 100m Round 1 - Heat 5 பிரிவில் இந்தியாவின் சார்பில் டுட்டி சந்த் பங்குபெற்றார். ஆனால், அவர் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்றிருந்த நிலையில், டுட்டி சந்த் 7வது இடத்தையே பிடிக்க நேர்ந்தது.
முடிவுக்கு வந்த கனவு
ஜமைக்காவின் Shelly-Ann Fraser-Pryce 10.84 நொடியில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். ஸ்விட்சர்லாந்தின் டெல் போன்டே 10.91 நொடியில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தார். நைஜீரியாவின் வோக்கோச்சா 11.00 நொடியில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். ஒலிம்பிக் விதிகளின் படி, முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற முடியும். இதனால், இந்திய வீராங்கனை டுட்டி சந்த்தின் 100 மீ கனவு முடிவு வந்துவிட்டது.
டுட்டி சந்த் தாயார்
ஆனால், இதில் சோகம் என்னவெனில், மகளுக்காக அணையா விளக்கு ஏற்றி காத்திருந்த டுட்டி சந்தின் தாயாருக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது. ஆம்! டுட்டி சந்தின் தாயார் அகாஜி சந்த், சொந்த கிராமத்தில் உள்ள கோவிலில், அணையா விளக்கு ஒன்றை ஏற்றி, அந்த விளக்கு அணையாமல் இருக்கும் வண்ணம் அவர் கோவிலிலேயே தங்கியும் இருக்கிறார்.
ஏமாற்றம்
இன்று (வெள்ளி) மகளின் போட்டி முடிவடையும் வரை, கடவுளிடம் பிரார்த்தனை செய்து, ஒளி அணையாமல் இருக்க பார்த்துக் கொண்டு கோவிலில் தான் இருப்பேன் என கூறி, விடிய விடிய கண் முழித்து காத்திருந்தார். ஆனால், டுட்டி சந்தின் இந்த தோல்வி, நிச்சயம் அவர்களது குடும்பத்திற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கும்.