இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்... காஸாவுக்கு ஆதரவான வாசகத்துடன் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி!
சவுதம்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காஸாவுக்கு ஆதரவான வாசகத்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் சவுதம்டனில் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள மொயீன் அலி காஸாவுக்கு ஆதரவாக "Free Gaza" என்ற வாசகம் கொண்ட காப்புகளை தனது கையில் அணிந்து விளையாடினார்.

இது பற்றி வந்த புகாரை தொடர்ந்து போட்டி நடுவர் டேவிட் பூன், மொயீன் அலியின் அந்த காப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இனிமேல் இதுபோன்று விதிமுறைக்கு மாறாக செயல்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அரசியல், மதம், இனம் தொடர்பான தகவல் கொண்ட எந்தவொரு பொருளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்த தடை இருக்கிறது. கிரிக்கெட் ஆடுகளத்தில் இதுபோல் விதிமுறையை மீறி நடக்கக்கூடாது என்று மொயீன் அலி எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மலேசியாவை சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரும் காஸாவுக்கு ஆதரவாக கையுறை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications