பிரிட்டோரியா: உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டவரான பென் ஸ்டோக்ஸ் புயல் வேகத்தில் தனது பேட்டிங் திறனைக் காட்டி, இங்கிலாந்து தேர்வுக் குழுவுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பில் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ். இதனால் பெரும் வேதனையும், வருத்தமும் அடைந்த அவர் தற்போது தனது அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து ரசிகர்களிடையே அலை பரப்பியுள்ளார்.

இங்கிலாந்து லயன்ஸ் என்ற அணியின் சார்பில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது அபாரமாக ஆடி ரன் குவித்தார்.
5வது வீரராக களம் இறங்கிய ஸ்டோக்ஸ், அடித்து நொறுக்கி ஆடினார். மொத்தம் 86 பந்துகளைச் சந்தித்து 151 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதில் 15 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடக்கம். மொத்தம் 117 நிமிடம் அவர் களத்தில் இருந்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை பென் ஸ்டோக்ஸ் மிகவும் அனாயசமாக எதிர்கொண்டு ஆடியதால் மைதானமே ரன் மழையில் நனைந்தது.
2 மாதங்களுக்கு முன்பு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் ஒரு ஆல் ரவுண்டர். ஆனால் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் சரிவர இல்லாததால் இவரை அணியிலிருந்து நீக்கினர். இருப்பினும் ஸ்டோக்ஸை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்களான இயான் போத்தம், கெவின் பீட்டர்சன், பால் காலிங்வுட் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் முதல் தர போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ரன்னாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார் ஸ்டோக்ஸ்.