கராச்சி: அனைத்து கிரிக்கெட் அணிகளிலும் உள்ள பந்து வீச்சாளர்களும் பந்தை சேதப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தில்லை. தற்செயலாக நடந்தது அது என்று கூறியுள்ளார் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி.பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பங்கேற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டார் அப்ரிடி. இதையடுத்து அவர் 2 டுவென்டி 20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், பந்தை சேதப்படுத்துவது என்பது புதிய பிரச்சினை அல்ல. முன்பிருந்தே இருந்து கொண்டுதான் உள்ளது. உலகில் உள்ள எல்லா அணிகளுமே ஒரு வகையில் பந்தை சேதப்படுத்திக் கொண்டுதான் உள்ளன. இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.பந்தை நான் கையாண்ட விதம் தவறாக இருக்கலாம். அதற்காக பந்தை சேதப்படுத்தியதாக கூறியது என்னை வருத்தமடையச் செய்துள்ளது. நான் வேண்டுமென்றே செய்யவில்லை. தற்செயலாக நடந்தது அது.பந்தை நான் கடித்ததாக கூறுவது தவறு. மோர்ந்து பார்க்கத்தான் செய்தான். ஆனால் அதைச் செய்திருக்கக் கூடாது என்று இப்போது நினைக்கிறேன்.போட்டியை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் பந்தையைக் கையாண்ட விதம் தவறாகப் போய் விட்டது.நான் செய்தது தவறுதான். இதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதிலிருந்து நான் மிகப் பெரிய பாடம் கற்றுக் கொண்டேன். இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்றார் அப்ரிடி.பெர்த் போட்டியின்போது பந்தை அப்ரிடி கடித்தது போன்ற காட்சி வீடியோவில் பதிவாகியதால் அவர் கையும், களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் இந்திகாப் ஆலம் கூறுகையில், மைதானத்தில் அப்ரிடி நடவடிக்கை ஏற்றுக் கொள்ளமுடியாததாகவே இருந்தது. கேப்டன் பொறுப்பேற்றிருந்த போது அவர் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. எதற்காக அவர் பந்தைக் கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று ஆலம் தெரிவித்துள்ளார்.