மும்பை : பளுதூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு கடந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால் இம்முறை அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ வித்தியாசத்தில் நான்காவது இடத்தை அவர் பிடித்தார்.
இதில் தமது செயல்பாட்டிற்கு மாதவிடாய் சிக்கல்கள் தான் காரணம் என்று கூறி இருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவர் அரோரா, மீராபாய் விவகாரத்திலும், மருத்துவக் குழுவின் தவறு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாதவிடாய் ஏற்பட்டதால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் பெண்களை மதிக்கின்றேன். மாதம்தோறும் மாதவிடாய் பிரச்சனை அவர்களுக்கு வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அதே சமயம் மாதவிடாய் பிரச்சினையால் தான் நான் தோல்வியை தழுவினேன் என்று எந்த ஒரு வீராங்கனையும் இதுவரை சொல்லி நான் பார்த்ததில்லை. இதைத்தான் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
உலகில் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ்க்கு மாதாவிடாய் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதா? அவர் ஒரு முறையாவது தமக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டது இதனால் தான் நான் தோல்வி அடைந்தேன் என்று கூறி இருக்கிறாரா.
ஒரு நல்ல வீரரையும் சிறந்த வீரரையும் வித்தியாசப்படுத்துவது இதுபோன்ற சில பிரச்சனைகளை அவர்கள் எப்படி கையாண்டு வென்றார்கள் என்பதில் தான்.இந்த விவகாரத்திலும் பயிற்சி குழுவினரும் மருத்துவ குழுவினரும் தோல்வியை தழுவி விட்டார்கள் என்று தான் நினைக்கின்றேன். அவர்கள் சரியாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த பிரச்சனை வந்திருக்காது.
ஒலிம்பிக்கிற்கு இவ்வளவு பணத்தை அரசு செலவிடுகிறது என்றால் சரியான பயிற்சியாளர் குழுவையும் மருத்துவ குழுவையும் நாம் அனுப்ப வேண்டும். ஏனென்றால் உலகம் முன் இந்தியா சார்பாக நமது விளையாட்டு வீரர்கள் நிற்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்று டாக்டர் அரோரா கூறியுள்ளார்.