பெங்களூர்: இந்தியாவின் முதல் பெண் பிளேட் ரன்னர் ஷாலினி சரஸ்வதி. சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய பாரா கேம்ஸில் T62 பிரிவில் புதிய வரலாறு படைத்திருந்தார். ஆசியாவின் வேகமான பெண் என்ற சாதனையை படைத்ததால், பலரின் கவனமும் இவர் மீது விழுந்தது. ஒரே நாளில் வாழ்க்கை மாறுமா என்ற கேள்விக்கு ஷாலினி வாழ்க்கை தான் பதிலாக இருக்கும்.
கம்போடியாவில் விடுமுறையை கொண்டாடிவிட்டு நாடு திரும்பிய நிலையில், 4வது திருமண நாள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு அறிய வகை பாக்டீரியா நோயால் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் கர்ப்பணியாக இருந்த ஷாலினி நோய் தாக்குதல் காரணமாக, மாதக்கணக்கில் மருத்துவமனை பெட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தையை இழந்த அவர், தனது கை மற்றும் கால்களையும் இழந்திருக்கிறார்.

ஆனால் வாழ்வில் இந்த சவாலில் இருந்து ஷாலினி எழுந்து வர செய்த முயற்சி தான் இன்று அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கான முக்கியமான காரணம். உடனடியாக ஃபிட்னஸ் மற்றும் உடல்நிலையை பராமரிக்க மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக பிபி ஐயப்பா என்ற பயிற்சியாளரும் உடனிருந்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு 10K மாரத்தான் போட்டியில் ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் முடித்து அசத்திய ஷாலினி, 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான தங்கப் பதக்கத்தை 2021ஆம் ஆண்டும், வெள்ளிப் பதக்கத்தை 2022ஆம் ஆண்டு பெற்றார்.
அங்கு தொடங்கிய பயணம் ஆசிய பாரா கேம்ஸ் வரை சென்றுள்ளது. ஆசிய பாரா கேம்ஸில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து ஷாலினி சரஸ்வதி பேசுகையில், அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஏனென்றால் விளையாட்டு பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. என்னுடைய மாற்றுத் திறன் காரணமாக விளையாட்டு பக்கமே வந்தவள். அந்த நேரத்தில் நான் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை வருவேன் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. ஆனால் ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்றதும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தடகள வீராங்கனைகள் சந்தித்தவும் புத்துணர்ச்சியை கொடுத்தது.
2014ஆம் ஆண்டு பிராஸ்திடிக் கால்களுடன் முதல்முறையாக பெங்களூரில் உள்ள கான்டீரவா மைதானத்திற்கு சென்றேன். அங்கு தான் பயிற்சியாளர் ஐயப்பாவை சந்திக்க முடிந்தது. அப்போது நாங்கள் விளையாட்டு பற்றியெல்லாம் சிந்திக்கவே இல்லை. மீண்டும் நடக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு பயிற்சியை தொடங்கினேன். திடீரென டிசிஎஸ் போட்டிகளில் பங்கேற்றதால், தொழிற்முறை போட்டிகளில் விளையாட தயாரானேன். என்னுடைய பயிற்சியாளர் இதுவரை மாற்று திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்ததே கிடையாது.
அதனால் நாங்கள் ரன்னிங் பிளேட்ஸ் தொடர்பாக ஏராளமான ஆய்வுகளை செய்தோம். அதிலும் பயிற்சியின் தொடக்க காலம் எனக்கு மிகவும் கடினமாக அமைந்தது. ஏனென்றால் ஓட தொடங்குவதற்கு முன் கைகளை வைப்பதற்கு எனக்கு ஒரு பொருள் தேவைப்பட்டது. அதனை கண்டடைவதற்கே சில காலமாகிவிட்டது. ஏராளமான கற்றல்களும் இருந்தன. ஆசிய போட்டிகளை எட்டுவதற்கு பின் எங்களின் 9 ஆண்டு கால உழைப்பு இருக்கிறது. எங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை முழுமையாக அறிந்து கொண்டோம்.
தற்போது இந்தியாவில் ஒலிம்பிக் தொடரை விடவும் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை வென்று வருகிறோம். ஒலிம்பிக், ஆசியப் போட்டிகள் என்று மாற்றுத்திறன் கொண்ட வீரர்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தயாராக இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் பாரா விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா சரியான வழியில் பயணிப்பதாகவே பார்க்கிறேன். ஆனால் உள்கட்டமைப்பு விஷயங்களில் நாம் இன்னும் பின் தங்கி இருக்கிறோம்.
பொது போக்குவரத்தில் எந்த மாற்றுத்திறனாளிகளும் சாதாரணமாக சென்றிட முடியாது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் கிராமங்களில் எளிதாக கிடைப்பதில்லை. அவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் இருந்தாலும், அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி இருக்கிறது. பாரா விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், பிராஸ்திடிக்ஸ் என்று அனைத்தின் விலையும் உச்சத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.