
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரசிகர்கள் மைதானத்துக்கு வர முடியாத நிலை உள்ளது. மேலும், வீரர்கள், ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் உலகில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1 ரத்து
ஃபார்முலா 1 கார் பந்தயம் கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய சமயத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த முயற்சிகள் நடந்தது. மார்ச் 15 அன்று ஆஸ்திரேலியாவில் துவங்க இருந்த தொடர் ரத்து செய்யப்பட்டது. அதற்கு காரணம், மெக்கிளாரன் அணியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது தான்.

மீண்டும் துவக்கம்
சுமார் இரண்டரை மாதங்களாக ஃபார்முலா 1 கார் பந்தயம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், விதிமுறைகளுடன் ஃபார்முலா 1-ஐ துவக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி ஒருவருக்கு கொரோனா வைரஸ் வந்தால், அதற்காக மொத்த தொடரையும் நிறுத்தாமல் தொடர முடிவு செய்துள்ளது நிர்வாகம்.

ரத்து செய்யப்படாது
அது பற்றி ஃபார்முலா 1 தலைமை செயல் அதிகாரி சேஸ் கேரி கூறுகையில், "ஒரு தனி நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பதால் தொடர் ரத்து செய்யப்படாது. நம்மால் அந்த நபரை ஹோட்டலில் தனிமைப்படுத்தி, அவருக்கு பதிலாக மாற்று வீரரை பங்கேற்க வைக்க முடியும்" என்றார்.

விதிமுறைகள்
மேலும், அவர் கூறுகையில் விரிவாக அளிக்கப்பட்டுள்ள 80 பக்க விதிமுறைகளை பின்பற்றி, பயணம், ஹோட்டலில் தங்குவது, உணவு, பந்தயங்களில் செய்ய வேண்டியவை, பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

எட்டு பந்தயங்கள்
தற்போது ஆஸ்திரியாவில் ஜூலை 5 தொடங்கி எட்டு பந்தயங்களை நடத்த அட்டவணையை வெளியிட்டுள்ளது ஃபார்முலா 1. இன்னும் சில தினங்களில் ஆண்டு முழுவதற்குமான அட்டவணையை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

அணிகள்
முன்பு ஒரு அணியில் 130 நபர்கள் இருந்த நிலையில், தற்போது 80 நபர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து கார் பந்தயங்களை நடத்த அந்தந்த நாட்டு அரசுகள் ஆதரவு அளிக்க உள்ளதாகவும் ஃபார்முலா 1 நிர்வாகம் கூறி உள்ளது.


Click it and Unblock the Notifications











