உலக கோப்பை கால் பந்து போட்டிகளை பார்க்கும் 50% உலக மக்கள்!
நியூயார்க்: உலக கோப்பை போட்டிகள் குறித்தும், போட்டித்தொடரை பார்க்கும் வாசகர்கள் குறித்தும் எடுக்கப்பட்ட ஆய்வில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் கடந்த 12ம்தேதி தொடங்கி நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடர் அடுத்தமாதம் 13ம்தேதி நிறைவுபெறுகிறது. இதில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 64 போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டித்தொடருக்கு உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பு இருப்பது பொதுப்படையாக தெரிந்தாலும், அதன் வீச்சு குறித்த ஆய்வை பிரிட்டீஷ் நிறுவனமான கன்டார்ஸ்போர்ட் மேற்கொண்டது. இதில் கிடைத்த சுவாரசிய தகவல்கள் இதோ..

பாதிக்கு பாதி
2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகளின்போது டிவிகளில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது போட்டியை பார்த்தவர்கள் எண்ணிக்கை 3.2 பில்லியன். உலகின் மொத்த மக்கள் தொகையில் இது 46 சதவீதம். அப்படியானால், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் ஒரு நிமிடமாவது அந்த போட்டிகளில் ஒன்றை பார்த்துள்ளனர்.

முதலிடத்தில் ஒலிம்பிக்
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை ஒரு நிமிடமாவது டிவியில் பார்த்தோர் எண்ணிக்கை 3.6 பில்லியனாம். அதாவது உலக கோப்பை கால்பந்தாட்டத்தைவிட சிறிது அதிகம். உலகிலேயே அதிகம் ரசிகர்களை கொண்டது ஒலிம்பிக் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது. அடுத்த இடம் கால்பந்துக்குதான்.

பைனல், தொடக்கம், அதிகம்
2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அந்த போட்டியை தொலைக்காட்சிகளில் சுமார் 1 பில்லியன் பேர் பார்த்துள்ளனர். லண்டன் ஒலிம்பிக்கின் துவக்க விழா நிகழ்ச்சிகளையும் இதே அளவுக்கான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

அமெரிக்க நிலவரம்
அமெரிக்காவை பொறுத்தளவில் கடந்த உலக கோப்பை கால்பந்தாட்டத்தை குறைந்து 20 நிமிடங்கள் தொடர்ந்து பார்த்தவர்கள் 94.5 மில்லியன். இது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 31 சதவீதமாகும். 2006 உலக கோப்பையை பாத்தோர் எண்ணிக்கையான 19 சதவீதத்தை ஒப்பிட்டால் இது நல்ல வளர்ச்சியாகும்.

பிரேசிலில் அதிகம்
உலக கோப்பையை நடத்திவரும் நாடான பிரேசில், அந்த நாட்டின் கால்பந்துக்காகவே உலக நாடுகள் மத்தியில் பிரபலமானது. அந்த நாட்டில் கடந்த உலக கோப்பையை 20 நிமிடங்களாவது பார்த்தோர் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதம்பேராம்.

மதிப்பு கூடுமா, இல்லையா?
பொருளாதார மந்த நிலையாலும், உள்நாட்டு கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட நாடு பிரேசில். நடைபெறும் உலக கோப்பையால் அந்த நாட்டு குறித்த தோற்றம் உலக நாடுகள் மத்தியில் நல்லதாக மாறியுள்ளது என்று கருத்துக் கணிப்பில் 35 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரம் 39 சதவீதம் பேர் இப்போட்டியால் தங்கள் நாட்டு கவுரவம் குறைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications