சென்னை: 18 வயதில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள பிரக்ஞானந்தாவின் செஸ் பயணம் குறித்து அவரின் தந்தை ரமேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தைகள் பற்றி பார்க்கலாம்.
செஸ் உலகக்கோப்பைத் தொடர் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் 18 வயதான தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான பிரக்ஞானந்தாவை எதிர்த்து விளையாடி வருகிறார். இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இந்தியா முழுக்க சந்திரயான் 3 மீதான எதிர்பார்ப்பு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

அதைவிடவும் அதிக ஆர்வத்துடன் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு காத்திருக்கிறார். பிரக்ஞானந்தாவின் தந்தை என்ற பெருமிதம் கண்களில் தெரிய, அனைத்து சாதனைகளுக்கும் பிரக்ஞானந்தாவும், அவரின் பயிற்சியாளர்களுமே காரணம் என்று ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார். பிரக்ஞானந்தாவின் செஸ் பயணம் தொடங்கிய பற்றி பேசிய அவரின் தந்தை, பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி அதிகமாக டிவி பார்க்கிறார் என்பதற்காக தான் செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டோம்.
அப்போது வைஷாலிக்கு 7 வயது. அப்போது 4 வயதில் இருந்த பிரக்ஞானந்தாவையும் உடன் அனுப்பினோம். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகமானது. அதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினார்கள். செஸ் விளையாட்டை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் என் பிள்ளைகள் இருவரின் வளர்ச்சி பற்றி எப்போதும் அறிந்துகொள்வேன். செஸ் உலகக்கோப்பைத் தொடரில் பிரக்ஞானந்தாவின் வெற்றி ஒரு தந்தையாக பெருமை அளிக்கிறது.
என் மனைவி நாகலட்சுமி மற்றும் பிரக்ஞானந்தாவுடன் தொடர்ந்து பேசுவேன். ஆனால் அரையிறுதியில் ஜாம்பவான் வீரரான ஃபேபியோ கருவானாவை வீழ்த்திய பின் என்னாலும் அவர்களுடன் பேச முடியவில்லை. அந்த அளவிற்கு இருவரும் பிஸியாக இருக்கிறார்கள். பிரக்ஞானந்தாவும் ஒவ்வொரு ஆட்டத்திலும் டை பிரேக்கர் வரை சென்று வெல்வதால், அவருக்கான ஓய்வு தேவைப்படுகிறது.
ஒரு தந்தையாக என்றுமே அவர்களின் செஸ் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தலையிட்டதே இல்லை. அனைத்துமே பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளரிடம் விட்டுவிடுவேன். நான் சொல்லும் ஒரேயொரு அறிவுரை நன்றாக சாப்பிட்டு, உடல்நிலையை பார்த்துக் கொள் என்பது தான். பிரக்ஞானந்தாவுக்கு தேவையான அனைத்தையும் அவரது அம்மா தான் செய்கிறார். வெற்றிக்கும் அவரே காரணம் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் சிறுவயது பயிற்சியாளரான தியாகராஜன் பேசுகையில், பிரக்ஞானந்தா முதல்முதலாக 4 வயதில் எங்கள் அகாடமியில் வந்து சேர்ந்தார். அவரை பார்த்த சில நாட்களிலேயே அவர் ஸ்பெஷலான வீரர் என்பது தெரிந்துவிட்டது. ஒவ்வொரு விஷயத்தில் அவ்வளவு வேகமாக கற்றுக் கொண்டார். வெறும் 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். யு-7 தேசிய அளவிலான போட்டியில் அப்போதே வென்றவர் பிரக்ஞானந்தா. நான் அவரின் முதல் பயிற்சியாளர் என்பதில் எப்போதும் பெருமைதான் என்று தெரிவித்துள்ளார்.