தமிழகத்தில் அடுத்த செஸ் போட்டி திட்டம்.. விஸ்வநாதன் ஆனந்த் கூறிய தகவல்.. நடந்து வரும் பேச்சுவார்த்தை
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிறகு தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ள பிரமாண்ட திட்டங்கள் குறித்து விஸ்வநாதன் ஆனந்த் பேசியுள்ளார்.
இந்திய செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்த FIDE தேர்தலில் வெற்றி பெற்றார்.

புதிய பொறுப்பு
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இனி செஸ் போட்டிகளின் வளர்ச்சிகள் எப்படி இருக்கும் என விஸ்வநாதன் ஆனந்த் பேசியுள்ளார். அதில் செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக முடிந்துள்ள இதே நேரத்தில் எனக்கு ஃபிடே துணைத்தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

அடுத்தகட்ட திட்டங்கள்
இனி தமிழகத்தில் என்னென்ன சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த முடியும் என்பது குறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். செஸ் விளையாட்டில் நாம் ஏற்கனவே முன்னணி நாடாக உள்ளோம். தற்போது சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் மாறி இருப்பதால், இனி அடுத்தடுத்து போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிறந்த தொடர்
இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசின் பங்களிப்பு தான். ஒரு செஸ் போட்டியைக் காண்பதற்கு இவ்வளவு மக்கள் கூட்டத்தை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலே இதுதான் சிறந்தது என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள் என விஸ்வநாதன் ஆனந்த் பெருமையுடன் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ்
தொடர்ந்து பேசிய அவர், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த குறைந்த காலமே கொடுக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப் பிரிவு ஒதுக்க முடியவில்லை. ஏற்கனவே பார்வையற்றோர் செஸ் கூட்டமைப்புடன் பேசி உள்ளேன். அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்னென்ன செய்ய முடியும் என்பதை ஆலோசித்துச் செய்யக் காத்திருக்கிறேன் என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications