ஜார்ஜியா: 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் செஸ் உலகக் கோப்பை தொடரின் இறுதி சுற்றில் வரலாற்றின் முதல் முறையாக இரண்டு இந்தியர்கள் தகுதி பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. மகளிர் செஸ் உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய வீராங்கனைகள் அரை இறுதி சுற்றுக்கு கூட முன்னேறியது கிடையாது.
ஆனால் இம்முறை அரையிறுதி சுற்றில் சீன வீராங்கனைகளை வீழ்த்தி கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஸ்முக் ஆகியோர் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் இந்த தொடரில் இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை கிடைக்கப் போவது உறுதியாகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்குபெறுத்துவதற்கான கேண்டிடேட் செஸ் தொடரில் இந்த இரண்டு வீராங்கனைகளும் விளையாட தகுதி பெற்று இருக்கின்றனர். 38 வயதான கோனேரு ஹம்பி, மகளிர் செஸ் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றார்
ஹம்பி இரண்டு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் ரன்னர் அப் பட்டதை வென்றிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் மகளிருக்கான உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை கைப்பற்றி இருக்கின்றார். செஸ் ஒலிம்பியாட், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோனேரு ஹம்பி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றார்.
இதேபோன்று 19 வயதான திவ்யா தேஸ்முக், உலக தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கின்றார். அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் 34 ஆண்டுகள் கேண்டிடேட் செஸ் தொடரில் தகுதி பெற்ற முதல் இளம் வீராங்கனை என்ற பெயரும் அவர் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இறுதி போட்டி இரண்டு கிளாசிக்கல் போட்டிகளாக நடைபெறும். அதில் இரு வீராங்கனைகளும் சமம் அடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைப் பிரேக்கர் சுற்று திங்கட்கிழமை அன்று நடைபெறும். இறுதிப் போட்டியில் முதல் ரவுண்ட் சனிக்கிழமை இந்திய நேரப்படி நான்கு முப்பது மணிக்கும், இரண்டாவது ரவுண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கும் ஜார்ஜியாவில் நடைபெறும். இந்த போட்டிகள் FIDE Chess youtube சேனலில் நேரடியாக பார்க்கலாம்.