ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை மரினிடம் போரடி வெற்றியைப் பறிகொடுத்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஸ்பெயின் வீராங்கனை மரினுடன் மோதினார். இப்போட்டியில் சிந்து வென்றால் பல வரலாறுகளை இந்தியா படைக்கும் என்பதால் பெறும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் ஒலிம்பிக் பேட்மிண்டன் தங்கமாக இது அமையும் என்பதால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த இறுதிப் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இரவு 6.55க்கு மாற்றப்பட்டது.
ஆனால் 2வது பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி நடந்ததால் சிந்து- மரின் மோதும் இறுதிப் போட்டி தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 7.35 மணியளவில் பரபரப்பான இறுதிப் போட்டி தொடங்கியது.
முதல் சுற்றில் பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது. இந்திய ரசிகர்கள் சிந்துவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தபடி போட்டியை ரசித்தனர்.
முதல் செட்டில் இருவருக்கும் சரிசமமான போட்டி நடைபெற்றது. நீயா நானா என்ற வேகத்தில் இருவரும் விளையாடினர். முதல் செட்டின் இறுதியில் பிவி சிந்து 21 -19 என்று முன்னிலை பெற்றார். முதல் செட் சிந்துவின் வசமானது.
இரண்டாவது செட்டில் சற்றே தடுமாறினார் சிந்து, மரின் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தார். முதலிலிருந்தே புள்ளிகளைக் குவித்த மரின், இறுதியில் 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம நிலைக்குக் கொண்டு போனார்.
மூன்றாவது சுற்றிலும் மரினின் கை ஓங்கியிருந்தது. இருவரும் சரிசமமாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். என்றாலும் மரினின் கையே ஓங்கியது. கடைசியில் 21-15 என்ற கணக்கில் மரினிடம் போராடி தோற்றார் சிந்து.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த சிந்து வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. சிந்துவின் தங்கம் வெல்லும் வாய்ப்பு கை நழுவி போனது.