
முதலாவது போட்டி
1992 ஆம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 43 ரன்களில் இந்தியா வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக அசாருதீனும் பாகிஸ்தானுக்கு இம்ரான் கானும் இருந்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய முதலாவது போட்டி இது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அசாருதீன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் 18 வயதே ஆன டெண்டுல்கர் 62 பந்துகளில் 54 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். அஜய் ஜடேஜா 77 பந்துகளில் 46, கபில்தேவ் 26 பந்துகளில் 25 ரன்கள் என விளாச இந்திய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் முஸ்டாக் அகமது 59 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாவீத் 28 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள நேரிட்டது. சொகைல் 95 பந்துகளில் 62, மியாண்டட் 110 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் கபில்தேவ், மனோஜ் பிரபாகர், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.

39 ரன்களில் வெற்றி
1996ஆம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி பெங்களூருவில் 2வது முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்தப் போட்டி 2வது கால் இறுதிப் போட்டியாகும். டாஸ் வென்ற அசாருதீன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 115 பந்துகளில் 93 ரன்களை சித்து குவித்தார். 25 பந்துகளில் 45 ரன்களைக் குவித்து அஜய் ஜடேஜா அசத்தினா. 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களைக் குவித்தது.
இப்போட்டியில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் காயமடைந்தால் சொகைல் கேப்டனாக இருந்தார். சொகலும் சயீத் அன்வரும் இணைந்து தொடக்க வீரர்களாக களமிறங்கி அசத்தினர். 113 ரன்கள் வரை இருவரும் நிலைத்து ஆடினர். ஆனால் பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களுடன் நடையைக் கட்டியது பாகிஸ்தான். இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது.
இந்திய அணியின் வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்தப் போட்டிதான் மியாண்டட்டின் கடைசி ஒரு நாள் போட்டியும் கூட. அவர் 64 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார்.

47 ரன்களில் வெற்றி
1999ஆம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியன்று இங்கிலாந்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இது உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3வது போட்டி. இதிலும் கேப்டன் அசாருதீன் டாஸ் வென்று பேட்டின்கையே தேர்வு செய்தார்.
ராகுல் டிராவிட் 61, அசாருதீன் 59, டெண்டுல்கர் 45 ரன்கள் என குவிக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தானின் கேப்டன் வாசிம் அக்ரம், அசார் முகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியோ 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களைத்தான் எடுத்தது. இதனால் இந்திய அணி 47 ரன்களில் வென்றது. இந்தியாவின் வெங்கடேஷ் பிரசாத் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

4வது மேட்ச்
2003ஆம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் மோதின. இதில் பாகிஸ்தானின் யூனிஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கடைசி உலகக் கோப்பை போட்டியில் வென்ற சயீத் அன்வர் 101 ரன்களை எட்டினார். மொத்தம் 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களைக் குவித்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்களை விளாசினார். அதுவும் ஒரே ஓவரில் அக்தரின் பந்தில் 18 ரன்களை விளாசித் தள்ளினார். 45.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 277 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
பாகிஸ்தானின் யூனிஸ் 71 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைத்தான் கைப்பற்றினார்.

5வது போட்டி
2011 மார்ச் 30-ந் தேதி இந்தியாவின் மொகாலியில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய கேப்டன் டோணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டெண்டுல்கர் 115 பந்துகளில் 85 ரன்களைக் குவித்தார். சேவாக் 38, ரெய்னா 26, டோணி 25 ரன்களை எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தானின் வகாப் ரியாஸ் 38 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 70 ரன்கள் எடுத்த நிலையில் 1 விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால் 199 ரன்களை எட்டுவதற்குள் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. மொத்தம் 231 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் இந்தழந்தது. இதனால் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதுவரையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











