ஒரே பதக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை குவித்து வருகின்றன. இந்தியா சார்பில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். ஸோ, இந்த நிமிடம் வரை இந்தியா வென்ற பதக்கம் இதுமட்டும் தான்.
முதல் தங்கம்
இந்நிலையில், பெண்களுக்கான triathlon போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், யாருமே எதிர்பார்க்காத வகையில், பெர்முடா நாட்டைச் சேர்ந்த ஃபுளோரா டஃபி என்பவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று புது சரித்திரம் படைத்துள்ளார். 33 வயதான ஃபுளோரா, ஒரு மணி நேரம் 55:36 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். பிரிட்டன் 2ம் இடத்தையும், அமெரிக்கா 3ம் இடத்தையும் பிடித்தன.
45 வருடங்கள் கழித்து
ஏறக்குறைய வெறும் 70,000 மக்கள் தொகையைக் கொண்ட பெர்முடா நாட்டில் இருந்து தங்கம் வெல்லும் முதல் வீராங்கனை எனும் சாதனையை ஃபுளோரா பெற்றுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கடந்த 1976ம் ஆண்டு, heavyweight பிரிவில் கிளாரன்ஸ் கேஹில் என்பவர் வெண்கலப்பதக்கம் வென்றதே அந்த நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கமாக அமைந்தது. அதன் பிறகு அந்த நாடு இப்போது தான்.. அதாவது 45 வருடங்கள் கழித்து அந்த நாடு தான் 2வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கிறது. அதுவும் தங்க பதக்கமாக.
போராடும் நாடுகள்
உலகின் பல நாடுகள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பெர்முடா அந்த சாதனையை தற்போது நிகழ்த்திக்காட்டிவிட்டது. இந்தியாவில் தனிநபர் பிரிவில், அபினவ் பிந்த்ரா மட்டுமே தங்கம் வென்றிருக்கிறார். அவருக்கு முன்போ, பின்னரோ தனி நபராக இந்தியாவில் இருந்து எவரும் தங்கம் வென்றதில்லை.