
மனைவி மரணம்
இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்ததால், இவரது மனைவி நிர்மல் கவுர் கொரோனா காரணமாக கடந்த ஜூன் 13ம் தேதி உயிரிழந்தார். அதேசமயம், மில்கா சிங்கின் உடல்நிலையும், கொரோனா சிகிச்சையில் பெரிதாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

குடும்பத்தினர் வேதனை
இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை தொடர்ந்து கொடுத்தாலும், இனி பயன் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்க, மில்கா சிங்கை வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து அவர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டு, மில்கா சிங் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், அவர் நேற்று இரவு அவர் காலமானார். கடந்த ஜூன் 13ம் தேதி மனைவி உயிரிழக்க, மில்கா சிங்கும் அதே வாரத்தில் உயிரை விட்டிருப்பது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பத்ம ஸ்ரீ விருது
இந்திய தடகளத் துறையின் ஜாம்பவானாக விளங்கிய பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படுகிறார். மில்கா சிங் 5 முறை ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் மில்கா சிங் 45.73 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது வந்தார். தேசிய அளவில் சுமார் 40 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

கொண்டாடிய ரசிகர்கள்
ரோம் ஒலிம்பிக் போட்டியில், நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டாலும், அதன் பிறகு தேசம் முழுக்க ஹீரோவாக கொண்டாடப்பட்டார். அவருடைய மின்னல் வேக ஓட்டத்தால் கவரப்பட்டு, பலரும் தடகள போட்டிகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினர். அவரது சாதனை, ஒரு பெரும் தலைமுறையையே உருவாக்கி இருக்கிறது என்றால் மிகையாகாது.


Click it and Unblock the Notifications