செஸ் ஒலிம்பியாட் போட்டி
முதல் 2 நாட்களாக வெற்றிகளை குவித்த இந்திய அணியினர், அடுத்தடுத்த சுற்றுகளில் சில தோல்விகளை சந்தித்தனர். எனினும் தற்போது வரை அதிக வெற்றிகளை பெற்ற அணியாக செஸ் ஒலிம்பியாட் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக இந்திய வீரர் குகேஷ் தொடர்ச்சியாக 6 சுற்றுகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
ஒரு நாள் ஓய்வு
விறுவிறுப்பாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இன்றைய தினம் எந்தவித போட்டிகளும் கிடையாது. வீரர், வீராங்கனைகளுக்கு ஓய்வு தரும் வகையில் இன்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இன்றைய தினம் செஸ் வீரர்களின் புத்துணர்ச்சிக்காக கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டி
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) மற்றும் ஐஎஸ்எல் தொடரின் சென்னையின் எஃப்சி அணியும் கால்பந்து தொடரை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் FIDE சார்பாக ஒரு அணி, இந்திய செஸ் கூட்டமைப்பின் அணி, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என மொத்தமாக 6 அணிகள் கொண்ட போட்டி இன்று நடைபெறுகிறது.
சுவாரஸ்ய விஷயம்
இந்த போட்டிகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க, போட்டிகள் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணி வீரர்களும், கால்பந்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.