நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த ஒரு கண்காட்சி செஸ் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஹிகாரு நகமுரா செய்த செயல், செஸ் உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்தப் போட்டியில் உலக சாம்பியனான இந்திய வீரர் குகேஷை வீழ்த்திய பிறகு, அவரது 'ராஜா' காயை எடுத்து ரசிகர் கூட்டத்தை நோக்கி அவர் தூக்கி எறிந்த சம்பவம், பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 'செக்மேட்: யுஎஸ்ஏ vs இந்தியா' என்ற பெயரில் ஒரு கண்காட்சி செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், உலக சாம்பியன் குகேஷும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவும் மோதினர். ஆட்டத்தில் குகேஷுக்கு 'செக்மேட்' வைத்த நகமுரா, வெற்றியைக் கொண்டாடும் விதமாக, குகேஷின் 'ராஜா' காயை எடுத்து, அங்கிருந்த ரசிகர் கூட்டத்தை நோக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்த குகேஷ், ஒரு நொடி திகைத்து, அதிர்ச்சியுடன் புன்னகைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நொடியிலிருந்து, செஸ் உலகில் புயல் வீசத் தொடங்கியது. அதிலும் வெற்றி பெற்றதை உறுதி செய்த அடுத்த நொடியே நகமுரா ஆவேசமாக ராஜாவை தூக்கி வீசி இருந்தார். அது இந்திய செஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
நகமுராவின் இந்தச் செயலுக்கு, முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான பதிவுகளை வெளியிட்ட அவர், நகமுராவைக் கடுமையாகச் சாடினார். "இது வெறும் அநாகரிகம் மட்டுமல்ல, நவீன செஸ் விளையாட்டின் சீரழிவிற்கான ஒரு தெளிவான அறிகுறி," என்று தனது முதல் பதிவில் கிராம்னிக் குறிப்பிட்டார்.
மேலும், "வெஸ்லி சோ, குகேஷ் போன்ற பல வீரர்கள் எதிரணிக்கு மரியாதை கொடுத்து, ஒரு ஜென்டில்மேன் போல நடந்துகொள்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாகத் தனது மோசமான நடத்தைக்காக அறியப்பட்ட ஒரு வீரரை விளம்பரப்படுத்துவது, நம்முடைய விளையாட்டை வேண்டுமென்றே சேதப்படுத்தும் செயல்" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

இந்தச் சர்ச்சை பெரிதான நிலையில், அமெரிக்க அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு பிரபல வீரரான லெவி ரோஸ்மேன் (கோதம் செஸ்), இதற்குப் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கினார். "இந்தச் செயல், நகமுராவின் சொந்த யோசனை அல்ல. போட்டியின் அமைப்பாளர்கள்தான், விளையாட்டிற்கு ஒரு பொழுதுபோக்கு அம்சத்தைச் சேர்க்கும் விதமாக, வெற்றியாளர் இதுபோலச் செய்ய வேண்டும் என்று எங்களை ஊக்குவித்தார்கள்."
"குகேஷும் ஹிகாருவும் மோதும் போட்டியில் வெல்பவர், ராஜாவை ரசிகர் கூட்டத்தில் எறிய வேண்டும் என்பது முன்பே திட்டமிடப்பட்டது. போட்டிக்குப் பிறகு, நகமுரா குகேஷிடம் பேசி, இது ஒரு ஷோவுக்காக மட்டுமே செய்யப்பட்டது, இதில் அவமரியாதை எதுவும் இல்லை என்று விளக்கினார்" என்று ரோஸ்மேன் கூறினார்.
இது அமைப்பாளர்களால் திட்டமிடப்பட்டது என்ற தகவல் வெளியானதும், கிராம்னிக் இன்னும் கோபமடைந்தார். ரசிகர் ஒருவரின் பதிவுக்குப் பதிலளித்த அவர், "அப்படியென்றால், இது திட்டமிடப்பட்டது என்பது இன்னும் மோசம்" என்றார்.
மற்றொரு பதிலில், "பேன்ட்டை அவிழ்த்தால் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்க முடியும். அமைப்பாளர்கள் கேட்டால், அதிக கவனத்தை ஈர்ப்பதற்காக வீரர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விடுவார்களா? இது தனிப்பட்ட ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால், அதை அநாகரிகமாகவும், முட்டாள்தனமாகவும், தகுதியற்றதாகவும் நான் கருதுகிறேன்" என்று விளாசினார்.