1990களில் லெக்ஸ்பின்னில் அனில்கும்ப்ளே கலக்கி வந்த நிலையில், ஆப்-ஸ்பின்னராக இந்திய அணியில் கால்பதித்தவர்தான் ராஜேஷ் சவுகான் (48). அப்போதைய ஜம்பாவான் ஆப்-ஸ்பின்னர்கள் சக்லைன் முஸ்தாக், முத்தையா முரளிதரனுக்கு ஈடாக பந்தை சுழல செய்வதில் இவர் கைதேர்ந்தவராக இருந்தார்.
இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகள், மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலையில் இவருக்கு பணி கிடைத்து குடும்பத்தோடு அந்த நகரில் தங்கியிருந்து வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் இன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜேஷ் சவுகானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சோதனைகளுக்கு பிறகு ராஜேஷ் சவுகான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐசியூ பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. நிலைமை மோசமாக இருப்பதால் இன்னும் இரு நாட்கள் கழித்துதான் எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.